அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் பிரச்சார பயணத்தை மேற்கொண்டு வரும் நிலையில், தனது பிரசாரத்தின் போது திமுக ஆளில்லாத ஆம்புலன்ஸை அனுப்பி இடையூறு செய்வதாக குற்றம் சாட்டியிருந்தார். இந்த நிலையில் உயிர் காக்கும் ஆம்புலன்ஸ் சேவையை திமுக அரசு எடப்பாடி பழனிச்சாமியின் பயணத்தை திசைதிருப்ப பயன்படுத்துவதாக அதிமுக மருத்துவர் அணி இணைச் செயலாளர் டாக்டர் சரவணன் குற்றம் சாட்டியுள்ளார்.
அதிமுக பொதுச் செயலாளரும் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி ‘மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்’ என்ற பெயரில் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். கோவையில் தொடங்கிய சுற்றுப்பயணம் பல்வேறு மாவட்டங்களை கடந்து தற்போது வேலூர் மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அணைக்கட்டு தொகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டிருந்தார். அப்போது ஆம்புலன்ஸ் ஒன்று பிரச்சாரம் நடந்த இடத்தின் குறுக்கே வந்தது. அப்போது பேசிய எடப்பாடி பழனிசாமி, “பல்வேறு கூட்டங்களில் நான் கவனித்து வருகிறேன். நடுவில் வேண்டுமென்றே ஆளில்லாத ஆம்புலன்ஸை அனுப்பி இடையூறு செய்யும் கேவலமான செயலை இந்த அரசாங்கம் செய்து வருகிறது. அடுத்த கூட்டத்தில் இதுபோன்று வந்தால் ஆம்புலன்ஸை ஓட்டி வருபவரை நாங்கள் நோயாளி ஆக்கி அதே ஆம்புலன்ஸில் அனுப்பி விடுவோம்” என பேசி இருந்தார்.
இந்நிலையில், உயிர் காக்கும் ஆம்புலன்ஸ் சேவையை திமுக அரசு அன்று ஓட்டுக்காக பணத்தை பதுக்கவும், இன்றைக்கு எடப்பாடியின் எழுச்சி பயணத்தை திசை திருப்பவும் பயன்படுத்துவதா? என அதிமுக மருத்துவரணி இணைச் செயலாளர் டாக்டர் சரவணன் கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் எடப்பாடியின் எழுச்சி பயணம் மாபெரும் வெற்றி அடைந்து வருகிறது. தொடர்ந்து முதலாம் கட்டம், இரண்டாம் கட்டம், தற்போது மூன்றாம் கட்டத்தில் மக்களின் எழுச்சி பயணத்தை கண்டு ஸ்டாலினுக்கும், அவரது அமைச்சர்கள் சகாக்களுக்கும் நடுக்கமே வந்துவிட்டது. முதலில் திமுக மூத்த தலைவர்கள் மற்றும் மூத்த அமைச்சர்களை வைத்து விமர்சனம் செய்தார்கள். அது மக்களிடத்தில் எடுபடவில்லை. இதனை தொடர்ந்து திமுக தற்போது ஒரு அரசியல் தரம் தாழ்ந்த திட்டத்தை கையாண்டு வருகிறார்கள், எடப்பாடியின் எழுச்சி பயணத்தில் எங்கெல்லாம் பேசுகிறாரோ அந்த கூட்டத்தில் காலியான ஆம்புலன்ஸ் வாகனத்தை உள்ளே புகுந்தி கூட்டத்தை திசை திருப்புகிறார்கள். இதை எடப்பாடி சுட்டி காட்டிய போது அமைச்சர் மா.சு. தங்களின் தில்லு முல்லுவை மறைக்க செய்தியாளர் சந்திப்பில், எடப்பாடியார் மிரட்டும் தோணியில் பேசி உள்ளார் என்று கூறியுள்ளார்.
அமைச்சர் மா.சு.திடீரென்று 108 ஆம்புலன்ஸ் டிரைவர் மீது நீலிக்கண்ணீர் வடிப்பது ஏன்? தமிழகத்தில் 1,352 ஆம்புலன்ஸ் உள்ளது, ஏறத்தாழ 6,000 மேற்பட்ட டிரைவர்கள் பணியாற்று வருகிறார்கள் .தொடர்ந்து பணி நிரந்தரம் கேட்டு போராடி வருகின்றனர். இதனைத் தொடர்ந்து சில நாட்களுக்கு முன்பு 2025- 2026 ஆண்டுகளில் விலைவாசி உயர்வுக்கு ஏற்ப 30 சதவீதம் ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும். இல்லை என்றால் அக்டோபர் மாதம் நாங்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடும் என்று தொடர்ந்து அரசை எச்சரித்து வருகிறார்கள். ஆனால் இதைப் பற்றி இதுவரை அமைச்சர் மா.சு.வாய் திறக்கவில்லை. உண்மையில் 108 ஆம்புலன்ஸ் டிரைவர்கள் மீது அக்கறை இருக்குமானால் இந்நேரம் அவர்கள் கோரிக்கை நிறைவேற்றி இருக்க வேண்டாமா?
அது மட்டுமல்ல ஸ்டாலின் ரோடு ஷோ நடத்துகிறார். அதேபோல அவரது மகன் உதயநிதி ஸ்டாலினும் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார் அப்போதெல்லாம் ஆம்புலன்ஸ் அந்தக் கூட்டத்திற்குள் வருவதில்லை. ஆனால் எடப்பாடியார் எழுச்சி பயணத்தில் பேசும் பொழுது காலி ஆம்புலன்ஸ் வருகிறது. இது இயற்கையாக நடைபெறுவதாக இல்லை. நான் சிலரிடம் விசாரித்த போது எனக்கு அதிர்ச்சியான தகவல் வந்தது. அதில் எடப்பாடி பேசுகின்ற கூட்டங்களில்108 ஆம்புலன்ஸ் தேவையை தவறாக பயன்படுத்துவதாகவும், அதேபோல தனியார் மருத்துவமனையின் ஆம்புலன்ஸை தவறாக பயன்படுத்துமாறு மிரட்டப்படுவதாக செய்தி வருகிறது. பொதுவாக காலி ஆம்புலன்ஸ் வரும் பொழுது அதை நிறுத்தி விசாரிக்கலாம் என்ற விதிமுறை உள்ளது. இது கூட தெரியாத அமைச்சராக மா.சு உள்ளார்.
ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் 108 ஆம்புலன்ஸ் மக்கள் உயிரை காக்கும் சேவையாக பயன்பட்டது, ஆனால் இன்றைக்கு ஸ்டாலின் திமுக அரசு தேர்தலை காலங்களில் பணத்தை பட்டுவாடா பதுக்குவதற்கும், தற்போது எடப்பாடியாரின் எழுச்சி பயணத்தை திசை மாற்றம் செய்வதற்கு பயன்படுத்துகிறது. காலி ஆம்புலன்ஸ் மூலம் அநாகரிக அரசியல் செய்யும் திமுகவை 2026 தேர்தலில் மக்கள் காலி செய்து வீட்டுக்கு அனுப்புவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
