புதுமண தம்பதிகளுக்கு இலவச பட்டு வேட்டி- பட்டுச் சேலை: எடப்பாடி பழனிசாமி!

வரும் 2026 பேரவைத்தேர்தலில் அதிமுக ஆட்சிக்கு வந்தால், புதுமண தம்பதிகளுக்கு இலவச பட்டு வேட்டி, பட்டுச் சேலை வழங்கப்படும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாக்குறுதி அளித்துள்ளார்.

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ‘மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்’ என்ற முழக்கத்தை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து வருகிறார். அந்தவகையில் எடப்பாடி பழனிசாமி நேற்று ராணிப்பேட்டையில் நடைபெற்ற பரப்புரையில் மக்கள் மத்தியில் பேசியதாவது:-

தமிழகத்தை ஒரு குடும்பம் சுரண்டுவதை தடுத்து நிறுத்துவதற்கான தேர்தல் 2026ல் நடைபெறுகிறது. திமுக நாளுக்கு நாள் தனது செல்வாக்கை இழந்து வருகிறது. 2026-ல் வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும். திமுகவுக்கு கொள்கையும் கிடையாது, கோட்பாடும் கிடையாது, அதிகாரம்தான் அவர்களுக்கு முக்கியம்.

உதயநிதி ஸ்டாலின் பேசுவதை கொஞ்சம் நேரம் கேட்டால் உண்மை என நம்பிவிடுவீர்கள். பொய்யைத் தவிர்த்து, அவர் வேறு எதையும் பேசமாட்டார். உதயநிதியை துணை முதலமைச்சராக்கியது தான் திமுக செய்த சாதனை. திமுக ஆட்சியில் மக்கள் கனவில் தான் வீடு கட்ட முடியும். திமுக ஆட்சியில் விவசாயிகள், நெசவாளர்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை. அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் லேப்டாப் திட்டத்தை நிறுத்தியது ஸ்டாலின் அரசு.

கொரோனா காலகட்டத்தில் பள்ளிக்கு செல்ல முடியாமல் மாணவர்கள் தவித்தபோது அவர்களின் நலன் கருதி ‘ஆல் பாஸ்’ போட்டது அதிமுக அரசு. மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்தவுடன் தீபாவளிக்கு சேலை வழங்கப்படும். தாலிக்கு தங்கம் திட்டம் மீண்டும் தொடங்கப்படும். புதுமண தம்பதிகளுக்கு இலவச பட்டு வேட்டி, பட்டுச் சேலை வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.