2011ல் விஜயகாந்திற்காக வாக்கு கேட்டவன் நான்: சீமான்!

விஜயகாந்த் உயிருடன் இருக்கும் போது, அவருக்கு ஆதரவாக விஜய் ஏன் வரவில்லை என்று நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

மதுரையில் நடைபெற்ற தவெகவின் 2வது மாநில மாநாட்டில் விஜய் சொன்ன குட்டிக் கதை புதிய விவாதத்தை ஏற்படுத்தியது. அதாவது, ஒரு நாட்டில் ஒரு ராஜா தனக்கு பக்கபலமாக இருக்க ஒரு தளபதியை தேடுகிறார். சரியான தகுதிகளுடன் 10 பேர் தேர்வாகின்றனர். அதில் இருந்து ஒருவரை தேர்வு செய்ய வேண்டும். இதனால் 10 பேருக்கும் ஒரு டெஸ்ட் வைத்திருக்கிறார். அவர்களிடம் ஒரு விதை நெல்லை கொடுத்து 3 மாதத்தில் நன்றாக வளர்த்து கொண்டு வாருங்கள் என்று அனுப்புகிறார். 3 மாதத்திற்கு பின் வரும் போது, ஒருவர் ஒரு விதை நெல்லை ஆளுயரத்திற்கும், மற்றொருவர் தோள் உயரத்திற்கும் என்று 9 பேர் நன்றாக வளர்த்துக் கொண்டு வருகிறார்கள். அதில் ஒருவர் மட்டும் வெறும் கையுடன் வந்துள்ளார். ஏன் என்று கேட்ட போது, நெல் வளரவே இல்லை என்று கூறி இருக்கிறார். இதனால் உற்சாகமடைந்த ராஜா, நீதான் என்னுடைய தளபதி, எல்லா அதிகாரமும் உனக்கு என்று கூறியுள்ளார். ஏனென்றால் மற்ற 9 பேரிடமும் கொடுத்த அவித்த விதை நெல். அது முளைக்காது. தலைவனுக்கான முக்கியமான அடிப்படை குணம் நேர்மையாக இருப்பது என்று தெரிவித்தார். இந்த குட்டிக் கதையை சில ஆண்டுகளுக்கு முன்பே நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மேடையில் பேசி இருக்கிறார். இதனால் தவெக தலைவர் விஜயை பலரும் கிண்டல் செய்ய தொடங்கினர்.

இந்த நிலையில் விஜயின் குட்டிக் கதை குறித்து நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது:-

2021 சட்டசபைத் தேர்தலில் வாக்கு சேகரித்த போது, மக்களிடம் ஒரு நேர்மையாளன், உண்மையாளனை தேர்வு செய்யுங்கள் என்று கோரினேன். அப்போது இந்தக் கதையை மக்களிடம் கூறினேன். கதை என்றாலும், இந்த நிலத்தில் யார் முதலில் கூறியுள்ளார் என்பது முக்கியம். அந்தக் கதையை விஜய் பேசி இருக்கிறார். நான் அடுத்த மன்னனை தேர்வு செய்வதற்காக வைக்கப்பட்ட டெஸ்ட் என்று கூறினேன். அதனை தம்பி விஜய், தளபதியை தேர்வு செய்வதற்காக வைக்கப்பட்ட டெஸ்ட் என்று மாற்றி கூறியுள்ளார். இதில் எந்த வருத்தமும் இல்லை. ஒன்றில் இருந்து தானே மற்றொன்றை கற்க முடியும். ஒரு இடத்தில் கற்றதை நான் கூறினேன். அண்ணனிடம் இருந்து கற்றதை தம்பி பேசி இருக்கிறார். அதில் ஒரு தவறும் இல்லை.

அதேபோல் ஒரு மாநாட்டில் அரைமணி நேரம் விஜய் பேசி இருக்கிறார். கடந்த முறை கொள்கை வழிக்காட்டியாக சொன்ன யாரையும் இம்முறை பேசவில்லை. புதிதாக திமுக மற்றும் அதிமுகவை தொடங்கிய அண்ணா மற்றும் எம்ஜிஆரை கொண்டு வந்துள்ளார். எந்தக் கட்சியை ஒழிக்கணும் என்று சொல்கிறாரோ, அந்தக் கட்சியை தொடங்கியது அண்ணா தான். அவர் வழியில் சென்று திமுகவை ஒழிப்பது என்பது வேடிக்கை. எம்ஜிஆர் யாரென்று அனைவருக்கும் தெரியும்.. அவர்தான் புதிதாக தெரிந்து கொள்கிறார். 2011ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் விஜயகாந்திற்காக வாக்கு சேகரித்தவன் நான். அப்போது விஜய் அவருக்கு ஆதரவாக பேசவில்லை. உயிருடன் இருக்கும் போதும் சென்று சந்திக்கவில்லை. முதல் மாநாட்டில் அண்ணா, எம்ஜிஆர், விஜயகாந்த் பெயரை குறிப்பிட்டிருந்தால் மகிழ்ச்சிக்கு உரியது. ஆனால் அப்போது கூறவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.