டெல்லி மருத்துவமனையில் எம்.பி திருச்சி சிவா அனுமதி!

தி.மு.க ராஜ்யசபா எம்.பி திருச்சி சிவா திடீர் உடல்நலக்குறைவு காரணமாக டெல்லியில் உள்ள ஆர்.எம்.எல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் கலந்து கொள்வதற்காக நாடாளுமன்ற எம்.பிக்கள் அனைவரும் டெல்லியில் உள்ளனர். தி.மு.க ராஜ்யசபா எம்.பி திருச்சி சிவாவும் டெல்லியில் இருக்கிறார்.
திருச்சி சிவாவுக்கு ஏற்கனவே தோள்பட்டையில் வலி இருந்து வந்த நிலையில், நேற்று வலி அதிகமானதைத் தொடர்ந்து உடல் நலக் குறைவு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து டெல்லியில் உள்ள ஆர்.எம்.எல் மருத்துவமனையில் திருச்சி சிவா அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள திருச்சி சிவாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்து வருகிறார். திருச்சி சிவா சிகிச்சை முடிந்து இன்று மாலை அவர் வீடு திரும்புவார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

திமுகவின் கொள்கை பரப்புச் செயலாளராக இருக்கும் திருச்சி சிவா தி.மு.கவின் சார்பில் ஐந்தாவது முறையாக எம்.பி-யாக இருக்கிறார். மாநிலங்களவை துணைத் தலைவராகவும் செயல்பட்டு வருகிறார் திருச்சி சிவா.