நல்லது செய்வதற்கு நான் ஏன் யோசிக்க வேண்டும்?: சிவகார்த்திகேயன்!

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள ‘மதராஸி’ படத்தில் சிவகார்த்திகேயன், வித்யூத் ஜம்வால், பிஜு மேனன், ருக்மணி வசந்த், விக்ராந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இசையமைப்பாளராக அனிருத் பணிபுரிந்துள்ளார். இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது.

இதில் சிவகார்த்திகேயன் பேசியதாவது:-

எனக்கு முருகதாஸ் படங்கள் மிகவும் பிடிக்கும். அஜித் நடித்த ‘தீனா’ படத்தில் வரும் மிரர் ஷாட் எனக்கு பிடிக்கும். அதன் பிறகு விஜயகாந்த் சாருடன் ‘ரமணா’ படம் செய்தார். அது மிகவும் ஸ்பெஷலான படம். அதன் பிறகு ‘கஜினி’. அதன் பிறகு ‘துப்பாக்கி’. இது தமிழ் சினிமாவில் மாஸ் படங்களை மறுவரையறை செய்தது. அதன் பிறகு ரஜினிகாந்த், சல்மான் கான் என நிறைய பேருடன் படம் செய்தார். அந்த பட்டியலில் என்னையும் சேர்த்ததற்கு நன்றி.

ஒரு பேட்டியில், ‘மதராஸி’ படத்தின் கதையை ஷாருக்கானிடம் சொன்னதாக கூறியிருந்தார். அந்த எஸ்ஆர்கே பண்ண வேண்டிய படத்தை இந்த எஸ்கே பண்ணதே மிகப்பெரிய விஷயம். ’கோட்’ படத்தின் விஜய்யுடன் அந்த காட்சியில் நடித்த பிறகு, அவரிடமிருந்து நான் ஊக்கம் பெறும் ஒரு காட்சியாகத்தான் நான் அதை பார்த்தேன். ஆனால் நிறைய பேர் குட்டித் தளபதி, திடீர் தளபதி என்று சொல்கிறார்கள். ஆனால் அப்படி எல்லாம் எதுவும் கிடையாது. அண்ணன் அண்ணன் தான். தம்பி தம்பிதான்.

ஒரு படம் நன்றாக இருந்தால், எனக்கு பிடித்திருந்தால் அந்த படக்குழுவை அழைத்து பாராட்டுகிறேன். ஆனால் இவன் என்ன அவ்ளோ பெரிய ஆளா? என்று கேட்கிறார்கள். நல்லது செய்வதற்கு நான் ஏன் யோசிக்க வேண்டும்?” இவ்வாறு சிவகார்த்திகேயன் பேசினார்.

’தர்பார்’ எதிர்பார்த்த வரவேற்பை பெறாத நிலையில், இந்தியில் சல்மான் கானை வைத்து ‘சிக்கந்தர்’ படத்தை இயக்கினார் முருகதாஸ். இப்படம் மிக மோசமான விமர்சனங்களை பெற்ற நிலையில், சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘மதராஸி’ மூலம் மீண்டும் தமிழுக்கு வந்துள்ளார் முருகதாஸ். விறுவிறுப்பாக கட் செய்யப்பட்ட ட்ரெய்லர் படம் மீதான ஆர்வத்தை தூண்டுகிறது. காதல் ஒரு பக்கம், ஆக்‌ஷன் ஒரு பக்கம், ஹீரோவுக்கு இருக்கும் பிரச்சினை என கதைக்களம் ‘கஜினி’யை நினைவூட்டுகிறது.

கெவின் குமாரின் ஆக்‌ஷன் காட்சிகள் ட்ரெய்லரிலேயே அனல் பறக்கின்றது. வித்யுத் பேசும் ‘துப்பாக்கி யார் கைல இருந்தாலும் நான் தான் வில்லன்’ என்ற வசனம் கவனம் ஈர்க்கிறது. முருகதாஸுக்கு இப்படம் ‘கஜினி’ போல பேர்வாங்கித் தருமா என்பதை தெரிந்து கொள்ள செப்.5 வரை காத்திருக்க வேண்டும்.