செஸ் ஒலிம்பியாட் முன்னேற்பாடுகள் குறித்து முதல்வர் ஆலோசனை!

சென்னையில் செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான முன்னேற்பாடுகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொண்டார்.

44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி வருகிற ஜூலை 28 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வரை வரலாற்று சிறப்புமிக்க சென்னை மாமல்லபுரத்தில் நடைபெற உள்ளது. 180க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து சுமார் 2,000-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் இதில் கலந்துகொள்ளவிருக்கின்றனர். இதையொட்டி தமிழக அரசு சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இதன் தொடக்கவிழா வருகிற ஜூலை 28 ஆம் தேதி மாலை, சென்னை ஜவாஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற இருக்கிறது. அதுபோல நிறைவு விழாவும் மிக பிரம்மாண்டமாக நடைபெறவிருக்கிறது.

இந்நிலையில், சென்னை, தலைமைச் செயலகத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டி ஏற்பாடுகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொண்டார். தொடக்க விழாவுக்கான ஏற்பாடு, வீரர்கள் தங்கும் இட வசதி உள்ளிட்ட பணிகளின் நிலை குறித்து கேட்டறிந்தார். இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் எ.வ. வேலு, மதிவேந்தன், மெய்யநாதன், தலைமைச் செயலாளர் இறையன்பு, சம்மந்தப்பட்ட துறை செயலர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

மேலும், நடப்பு நிதியாண்டில் மாநில வருவாய் குறித்த நிதித்துறை கூட்டத்திலும் முதல்வர் கலந்துகொண்டார். கொரோனா தொற்றில் இருந்து மீண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், இன்று தலைமைச் செயலகம் வந்ததும் குறிப்பிடத்தக்கது.