கேரளாவுக்கு பரவிய ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல்!

கேரள மாநிலத்தில் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது.

கேரள மாநிலத்தின் வயநாட்டில், ஆப்ரிக்க பன்றிக் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆப்ரிக்க பன்றிக் காய்ச்சல் என்பது வளர்ப்புப் பன்றிகளை பாதிக்கும் மிகவும் ஆபத்தான வைரஸ் தொற்று நோயாகும். கேரள மாநிலத்தின் வயநாடு மாவட்டத்தில் உள்ள மானந்தவாடியில் உள்ள இரண்டு பண்ணைகளில் ஆப்ரிக்க பன்றிக் காய்ச்சல் பதிவாகி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த மாத தொடக்கத்தில் பீகார் மற்றும் சில வடகிழக்கு மாநிலங்களில் ஆப்ரிக்க பன்றிக் காய்ச்சல் கண்டறியப்பட்டு உள்ளதாக மத்திய அரசு எச்சரிக்கை விடுத்ததைத் தொடர்ந்து உயிரி பாதுகாப்பு நடவடிக்கைகளை கேரள மாநில அரசு கடுமையாக்கியது. இருந்த போதிலும் இந்த வைரஸ் கேரளாவுக்கு பரவி உள்ளது. இது குறித்து கால்நடை பராமரிப்புத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

2 பண்ணைகளில் ஒன்றில், பல பன்றிகள் கூட்டமாக இறந்ததாக வந்த தகவலை அடுத்து, அவற்றின் மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டன. போபாலில் உள்ள உயர் பாதுகாப்பு விலங்கு நோய்களுக்கான தேசிய நிறுவனத்தில் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்ட பிறகு வயநாடு மாவட்டத்தில் செயல்படும் இரண்டு பண்ணைகளில் உள்ள பல பன்றிகளுக்கு இந்நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டது. தற்போது பரிசோதனை முடிவில் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. ஆகவே நோய் பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி, இரண்டாவது பண்ணையில் உள்ள 300 பன்றிகளை அழிப்பதற்கான வழிமுறைகள் வழங்கப்பட்டு உள்ளன. இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.

இதையடுத்து, மாநிலம் முழுவதும் தீவிர கண்காணிப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. இது மனிதர்களிடம் பரவாது என்றாலும், தொற்றுள்ள பன்றியிலிருந்து மனிதர்கள் மூலமாக மற்ற விலங்குகளுக்கு பரவும். 1920ல் ஆப்பிரிக்காவில் முதன்முதலில் இந்த தொற்று கண்டறியப்பட்டது.