ஜூலை 28ஆம் தேதி 4 மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை!

செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறுவதை முன்னிட்டு 4 மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் சர்வதேச ஒலிம்பியாட் செஸ் போட்டிகள் ஜூலை 28ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில், 187 வெளிநாடுகளில் இருந்து 2,500க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்க உள்ளனர். இதற்கான முன்னேற்பாட்டு பணிகளை பல்வேறு துறைகளைச் சார்ந்த அமைச்சர்களும் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இது தொடர்பான பணிகளை முடுக்கிவிட்டுள்ளார். அமைச்சர்கள் அதிகாரிகளுடன் இது தொடர்பாக ஆலோசனைகளில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் நேற்று சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டியின் முன்னேற்பாடுகள் குறித்து பல்வேறு விஷயங்கள் ஆலோசிக்கப்பட்டன. அப்போது செஸ் ஒலிம்பியாட் நிகழ்வு தொடங்குவதை முன்னிட்டு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு ஜூலை 28ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கலாமா என்றும் ஆலோசிக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு அதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
ஜூலை 28ஆம் தேதி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.