எடப்பாடி பழனிசாமி டெண்டர் முறைகேடு வழக்கு: ஆகஸ்ட் 2ஆம் தேதிக்கு தள்ளி வைப்பு!

அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான ஒப்பந்த முறைகேடு வழக்கு விசாரணை ஆகஸ்ட் 2ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது

முன்னாள் முதல்வர் பழனிசாமி ரூ.4,800 கோடி டெண்டர் முறைகேட்டில் ஈடுபட்டதாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, உயர் நீதிமன்றத்தில் கடந்த 2018ஆம் ஆண்டில் மனுத்தாக்கல் செய்தார். அதில், தமிழகத்தில் நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்தங்களை, தமிழக முதல்வராகப் பதவி வகித்த பழனிசாமி, தனக்கு வேண்டப்பட்டவர்களுக்கும், நெருங்கிய உறவினர்களுக்கும் வழங்கியதன் மூலம் ரூ.4,800 கோடி அளவுக்கு முறைகேடுகளில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், “முதல்வராகப் பதவி வகித்த பழனிசாமி மீதான இந்த குற்றச்சாட்டு குறித்து வெளிப்படைத்தன்மையுடன் விசாரிக்க வேண்டியிருப்பதால், இந்த புகார் குறித்து சிபிஐ விசாரித்து, முகாந்திரம் இருந்தால் வழக்கு பதிவு செய்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கடந்த 2018ஆம் ஆண்டில் உத்தரவிட்டது. சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து, எடப்பாடி பழனிசாமி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் கடந்த 2018ஆம் ஆண்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், சிபிஐ விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்தது.

இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் 4 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள நிலையில், வழக்கை விரைந்து விசாரிக்க தலைமை நீதிபதி அமர்வில் தமிழக அரசு வழக்கறிஞர் ரஞ்சித்குமார் நேற்று முறையீடு செய்தார். அதனையேற்றுக் கொண்ட கொண்ட தலைமை நீதிபதி அமர்வு, வழக்கு விரைந்து பட்டியலிடப்படும் என உறுதி அளித்தது. அதன்படி, எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கை தள்ளி வைக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது. இந்த கோரிக்கையை ஏற்று எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான ஒப்பந்த முறைகேடு வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 2ஆம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது.