எந்த அரசியல் கட்சியிலும் இணையப்போவதில்லை: யஷ்வந்த் சின்கா

தான் எந்த அரசியல் கட்சியிலும் இணையப்போவதில்லை. சுதந்திரமாக இருக்கப் போகிறேன் என்று முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்கா தெரிவித்துள்ளார்.

நடந்து முடிந்த குடியரசுத் தலைவர் தேர்தலில், எதிர்க்கட்சிகளின் கூட்டணி வேட்பாளராக அறிவிக்கப்பட்டு தோல்வியடைந்த யஷ்வந்த் சின்கா (84), பொது வாழ்க்கையில் என்ன பங்கு வகிக்க வேண்டும் என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை என்று தெரிவித்துள்ளார்.

நான் தற்போது வரை சுதந்திரமாகவே இருக்கிறேன், எந்த அரசியல் கட்சியிலும் இணையப்போவதில்லை என்று தெரிவித்திருக்கும் யஷ்வந்த் சின்கா, குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடுவதற்காக, திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தேசிய துணைத் தலைவர் பதவியிலிருந்து விலகினார்.

திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் கூட்டணி வேட்பாளராக குடியரசுத்தலைவர் தேர்தலில் அறிவிக்கப்பட்டார் யஷ்வந்த் சின்கா. இந்த தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் நிறுத்தப்பட்ட திரௌபதி முர்மு வெற்றி பெற்று, நாட்டின் 15வது குடியரசுத் தலைவராக நேற்று பதவியேற்றுக் கொண்டார்.

தேர்தல் முடிவுக்குப் பிறகு திரிணமூல் காங்கிரஸ் கட்சியுடன் தொடர்பில் இருக்கிறீர்களா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு இல்லை என்று பதிலளித்த யஷ்வந்த் சின்கா, யாரும் என்னிடம் பேசவில்லை; யாரிடமும் நானும் பேசவில்லை. திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைமையுடன் தனிப்பட்ட முறையில் பேசினேன் என்று தெரிவித்தார்.