தேசிய விருது கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை: அபர்ணா!

எனக்கு தேசிய விருது கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை என, நடிகை அபர்ணா பாலமுரளி கூறினார்.

68வது தேசிய திரைப்பட விருதுகள் கடந்த 22ம் தேதி அறிவிக்கபட்டன. 2020ல் வெளியான திரைப்படங்களுக்கான தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கபட்டன. அதில் சூரைப்போற்று படத்தில் நடித்த சூர்யாவுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது, சிறந்த நடிகைக்கான தேசிய விருது அபர்ணா பாலமுரளிக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தை சுதா கொங்கரா இயக்கியிருந்தார். நடிகர் சூர்யா கதாநாயகனாக நடித்தார். ஆனால் தேசிய விருது அறிவிக்கப்பட்ட செய்தி வெளியான போது அவர் பொள்ளாச்சி பகுதியில் சூட்டிங்கில் பங்கேற்று இருந்தார். 26 வயதான நடிகை அபர்ணா பாலமுரளிக்கு தேசிய விருது சமீபத்தில் கிடைத்த நிலையில், தனக்கு தேசிய விருது கிடைக்கும் என்று தான் எதிர்பார்க்கவில்லை என்று அவர் தெரிவித்தார்.

தேசிய விருது கிடைத்தது குறித்து அவர் கூறுகையில், “எனக்கு மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது. இந்த விருதை இப்படத்தின் இயக்குனர் சுதாவுக்கு அர்ப்பணிக்கிறேன். அவர் தான் எனக்கு பின்புலமாக நின்று ஆதரவு அளித்தார். இந்த திரைப்படம் கொரோனா காலகட்டத்தில் வெளியாகினது. தியேட்டர்களில் முறையாக திரையிடப்படாவிட்டாலும் நல்ல வரவேற்பை பெற்றது. என் உணர்ச்சிகளை விவரிக்க வார்த்தைகள் இல்லை” என்று தெரிவித்தார்.

கேரள மாநிலம் திருச்சூரை பூர்வீகமாக கொண்ட அபர்ணா, தனது 18 வயதில் திரைத்துறைக்கு அடி எடுத்து வைத்தார். அவருடைய முதல் படமாக மலையாளத்தில் வெளியான ‘யாத்ரா தொடருன்னு’ என்ற திரைப்படம் 2013 ஆம் ஆண்டு வெளியானது.