மக்களுக்கு பிரச்னை என்றால் கண்ணகியாக வருவேன்: பிரேமலதா

எப்படி நியாயம் கேட்டு கண்ணகி மதுரையை எரித்தாளோ, அது போல மக்களுக்கு ஒரு பிரச்னை என்றால், இன்றைக்கு கண்ணகியாகி நான் எல்லா இடங்களுக்கும் வருவேன் என தேமுதிக பொருளாளர் பிரேமலதா தெரிவித்தார்.

மின்கட்டண உயர்வு, உணவு பொருட்களுக்கு ஜி.எஸ்.டி ரத்து செய்ய கோரி, மதுரையில் தே.மு.தி.க., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் பங்கேற்ற தே.மு.தி.க., பொருளாளர் பிரேமலதா பேசியதாவது:-

நூறுக்கும் பீருக்கும் சோறுக்கும் கூட்டம் கூட்டும் நிலையில் பா.ஜ.,வும் சேர்ந்துள்ளது. ஆனால் இது தானா சேர்ந்த கூட்டம். மக்கள் பிரச்னைக்காக தே.மு.தி.க.,வில் மக்கள் தானாக சேர்ந்துள்ளனர். விலைவாசி உயர்வை காரணம் காட்டி ஆட்சியில் அமர்ந்த தி.மு.க., தேர்தல் வாக்குறுதிகளை மறந்தது. மக்களிடம் கருணாநிதிக்கு 80 கோடி ரூபாயில் கடலில் பேனா அமைக்கவா தி.மு.க., வரி வசூலிக்கிறது. நடிகர் சங்க தேர்தலின் போதே மிகப்பெரிய பேனா வழங்கப்பட்டு விட்டதே.

மத்திய, மாநில அரசிடம் நிதி இல்லை என்றால் ஏற்கனவே ஆண்ட கட்சி, ஆளும் கட்சி அமைச்சர்களின் ஊழல் பணத்தை வசூலித்தாலே போதும். மக்களிடம் வரி வசூலிக்க வேண்டாம். மின்கட்டணம் , சொத்து வரி என திமுக அரசு கொடுக்காத வாக்குறுதிகளை நிறைவேற்றி கொண்டிருக்கிறார்கள். எப்படி நியாயம் கேட்டு கண்ணகி மதுரையை எரித்தாளோ, அது போல மக்களுக்கு ஒரு பிரச்னை என்றால், இன்றைக்கு கண்ணகியாகி நான் எல்லா இடங்களிலும் நான் வருவேன். இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா கூறியதாவது:-

மக்களுக்கான அனைத்து வரிகளும், விலைவாசியும் உயர்ந்து கொண்டே போகிறது. மற்றொருபுறம் மின்சாரக் கட்டணம் உயர்வு, சொத்து வரி உயர்வு, பெட்ரோல், டீசல் என விலைவாசி உயர்வு மக்களை வாட்டுகிறது. ஜிஎஸ்டி உயர்வால் ஏற்கெனவே மக்கள் நிறைய வரிகளை கட்டிக் கொண்டுள்ளனர், வருமானத்திற்கு என்ன வழி என்று அரசாங்கம் சிந்திக்க வேண்டும். கொரோனா ஏற்படுத்திய பொருளாதார பாதிப்பில் இருந்து மக்கள் இன்னும் வெளியில் வர முடியவில்லை, வருமானம் இல்லை, அரசாங்கத்திற்கான வருமானத்தை மட்டும் அவர்கள் குறிக்கோளாக இருக்கக் கூடாது.

பேக் செய்யப்பட்ட அனைத்து உணவுப் பொருட்களுக்கும் ஜிஎஸ்டி என்பது ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம். அதனால் தேமுதிக சார்பாக இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. விலைவாசி உயர்வை திரும்பப்பெற வேண்டும் என வலியுறுத்துகிறோம். இது சம்பந்தமாக நேற்றுகூட விஜயகாந்த் அறிக்கை விட்டிருந்தார்.

சின்னசேலம் மாணவி உயிரிழப்பு தமிழகத்தில் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. அந்த மாணவி புதைக்கப்பட்ட இடத்தில் ஈரம் கூட காயவில்லை, திருவள்ளூரில் ஒரு மாணவி தற்கொலை செய்து கொண்டுள்ளார். தொடர்ந்து இது போன்ற சம்பவம் நடைபெறுகிறது. சின்னசேலம் மாணவி வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றினால் மட்டும் பத்தாது. ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழுவை அமைத்து உண்மையில் அந்த மாணவி தற்கொலை செய்து கொண்டாரா இல்லை அது கொலையா எனக் கண்டறிய வேண்டும். மாணவிகள் உண்மையில் தற்கொலை செய்கிறார்கள் என்றால் அந்த தற்கொலைக்கு காரணம் யார் என்று கண்டுபிடிக்க வேண்டும். தமிழக அரசு இதில் உடனடி கவனம் செலுத்த வேண்டும்.

காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது பாஜக மீது பல்வேறு ஊழல் வழக்குகளை சுமத்தினார்கள். இன்று பாஜக ஆட்சியில் உள்ளதால் காங்கிரஸ் மீது முன்னர் பதியப்பபட்ட ஊழல் வழக்கை தற்போது கொண்டு வருகிறார்கள். ஆளுங்கட்சி முன்னாள் ஆளுங்கட்சி மீது ஊழல் வழக்குகள் போடுவது தமிழ்நாடு மட்டுமல்ல இந்தியாவில் இருக்கும் ஒரு விஷயம். யாராக இருந்தாலும் தப்பு செய்தால் தண்டனை பெற்று தான் ஆக வேண்டும். தப்பு செய்திருந்தால் அதற்கான பலனை காங்கிரஸ் அனுபவிக்க வேண்டும். உப்பு தின்னால் தண்ணி குடித்து தான் ஆக வேண்டும். தவறு செய்தால் யாராக இருந்தாலும் சட்டத்தின் முன்பு சமம்தான். நிச்சயமாக உண்மையில் தப்பு செய்திருந்தால் அவர்களுக்கு தண்டனை கிடைப்பது உறுதி. இவ்வாறு அவர் கூறினார்.