ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதி சுட்டுக் கொலை: 2 வீரர்கள் காயம்!

ஜம்மு-காஷ்மீர் பாரமுல்லா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே ஏற்பட்ட துப்பாக்கிச் சூட்டில் பயங்கரவாதி கொல்லப்பட்டான், 2 வீரர்கள் காயமடைந்தனர்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா மாவட்டத்தின் க்ரீரி பகுதியில் உள்ள வாணிகம் பாலா என்ற இடத்தில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாகப் பாதுகாப்புப் படையினருக்குத் தகவல் கிடைத்தது. அதைத் தொடர்ந்து அங்கு சுற்றிவளைத்து தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அப்போது பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த துப்பாக்கிச் சூட்டில் அடையாளம் தெரியாத பயங்கரவாதி ஒருவன் கொல்லப்பட்டான். 2 பாதுகாப்புப் படை வீரர்கள் காயமடைந்தனர். இதையடுத்து கொல்லப்பட்ட பயங்கரவாதி எந்த பிரிவைச் சேர்ந்தவர்கள் என்று அடையாளம் காணப்பட்டு வருகின்றனர்.