திமுக தலைமையிலான கூட்டணி தொடரும்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

தமிழகத்தில் திமுக தலைமையிலான கொள்கைக் கூட்டணி தொடரும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

‘மனோரமா நியூஸ்’ நடத்தும் கான்க்லேவ் நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் மலையாளத்தில் உரை நிகழ்த்தினார். அப்போது அவர் பேசியதாவது:-

மலையாள மனோரமா நாளிதழ் அதிக வாசகர்களை கொண்ட இதழாக உள்ளது. கேரளாவை பொறுத்தவரை மலையாள மனோரா என்பது பெரும்பாலானவர்களின் குடும்பத்தில் ஒரு அங்கம். இந்தியா விடுதலை பெற்று 75 ஆண்டுகள் ஆவதை முன்னிட்டு, அந்த நிறுவனம் நடத்தும் கருத்தரங்கில் பங்கேற்பது பெருமை அளிக்கிறது. கோவிட் காரணமாக நேரடியாக பங்கேற்க முடியவில்லை.

இன்னும் பல நூறாண்டுகளுக்கு இந்தியா வலிமையாக இருக்க கூட்டாட்சி மதசார்பின்மை சமத்துவம், சோசியலிசம் ஆகியவற்றை தொடர்ந்து பலப்படுத்த வேண்டும். இதனை காப்பாற்றுவது தான் இந்தியாவை காப்பாற்றுவது ஆகும். 75ம் ஆண்டு சுதந்திரத்தை கொண்டாடுவது வெறும் கொண்டாட்டமாக இருக்காமல் இன்னும் 100 ஆண்டுகளுக்கு இந்தியா வலிமையாக இருப்பதற்கு சிந்திக்க வேண்டும். இந்தியா மேலும் வலிமையோடு இருக்க ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். இந்தியா மேலும் வலிமையோடு இருக்க ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். தமிழ் மலையாளம் மொழிகளுக்கு இடையே ஆழமான உறவு இருக்கிறது. இந்தியாவின் மீக நிண்ட வரலாறு மக்களின் சகோதரத்துவ உணர்வு நாட்டை காக்கும். ஒரே நாடு ஒரே மொழி என்போர் கூட்டாட்சி தத்துவத்தை கொண்ட இந்திய திருநாட்டின் எதிரிகள் ஆவர். அதிகாரம் பொருந்திய மாநிலங்கள் உள்ளது. இந்தியாவிற்கு பலவீனம் அல்ல. பலம் தான்.

வேற்றுமையில் ஒற்றுமை என்பதை நேரு தாரக மந்திரமாக கொண்டு இருந்தார். நாட்டு மக்கள் ஒற்றுமையாக வாழ, மொழி வாரி மாநிலங்களை நேரு ஏற்படுத்தி தந்தார். இந்தி ஒரு போதும் திணிக்கப்படாது என உறுதிமொழி அளித்தார்.

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தமிழ்நாட்டின் பங்கு 9.22% ஆகும். மக்களின் அன்றாட தேவைகளையும் நிறைவேற்றும் கடமை மாநில அரசுகளுக்கே உள்ளது. மாநில அரசுக்கு தன்னிறைவு பெற்ற அரசுகளாக இருந்தால் தான் இந்தியா மகிழ்ச்சியாக இருக்கும். இந்தியா என்பது கூட்டாட்சி கோட்பாட்டை மதித்து நடக்க வேண்டும். ஆனால் அதற்கு எதிரான செயல்கள் நடைபெறுகின்றன. மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்பதில் நாம் உறுதியாக இருக்க வேண்டும். கருத்தை தெரிவிக்கும் களமான நாடாளுமன்றத்தில் பேச்சுரிமை, கருத்துரிமை மறுக்கப்படுகிறது. மக்கள் பிரச்னைகள், கருத்துகளை சொல்ல பார்லிமென்டில் எம்.பி.,க்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. எம்.பி.,க்களுக்கு பேச்சுரிமை மறுக்கப்படுகிறது. பேசியதற்காக எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இது தான் இன்றைய இந்தியாவின் நிலை. பார்லிமென்ட் ஜனநாயகம் காக்கப்பட வேண்டும். தேசிய கல்வி கொள்கை உள்ளிட்ட ஒன்றிய அரசின் கொள்கைகள் மக்களுக்கு எதிரானதாக உள்ளன. இந்தியாவில் ஜனநாயகமே பொருத்தமான கொள்கை.

தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான கூட்டணி தொடரும். எங்களுக்கு தேவையான ஆலோசனைகளை இடது சாரிகள் வழங்கி வருகின்றனர். திமுக தலைமையிலான கூட்டணி தேர்தலுக்கான கூட்டணி அல்ல. கொள்கைகளுக்கான கூட்டணி. லட்சியக்கூட்டணி. திமுக கூட்டணியில் இணக்கமான சூழல் நீடிக்கிறது. கூட்டணி தொடரும். இவ்வாறு அவர் பேசினார்.