சர்வதேச அளவில் நடைபெறும் போட்டியில் நாட்டின் பிரதமர் படத்தை போடாததில் இருந்தே தி.மு.க.வின் மனநிலை தெரிந்துவிட்டது என்று நடிகை குஷ்பு கூறியுள்ளார்.
செஸ் ஒலிம்பியாட் போட்டி இன்று தொடங்கும் நிலையில் அரசு விளம்பரங்களில் பிரதமர் மோடியின் படம் இடம் பெறாதது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக பா.ஜனதாவை சேர்ந்த நடிகை குஷ்பு கூறியதாவது:-
சர்வதேச செஸ் போட்டி தமிழகத்தில் நடைபெறுவது தமிழ்நாட்டுக்கு பெருமை. ஆனால் இந்த பெருமை கிடைக்க உதவியது மத்திய அரசு. மத்திய அரசு அனுமதித்து இருக்காவிட்டால் போட்டி இங்கு நடந்திருக்குமா? சர்வதேச அளவில் நடைபெறும் போட்டியில் நாட்டின் பிரதமர் படத்தை போடாததில் இருந்தே தி.மு.க.வின் மனநிலை தெரிந்துவிட்டது. மோடி பா.ஜனதாவுக்கு மட்டுமல்ல. தி.மு.க. உள்பட இந்த நாட்டுக்கே பிரதமர். நாங்கள் போட செல்வது பா.ஜனதா தலைவர் படத்தை அல்ல. நாட்டின் பிரதமர் படத்தை. பிரதமருக்கு மரியாதை கொடுக்க தெரியாத அரசாக இந்த அரசு உள்ளது.
பண்பாடு, நாகரீகம், மரியாதை கொடுக்க தெரியாத தி.மு.க. அரசால் தமிழ்நாட்டுக்கு அவமானம் ஏற்பட்டுள்ளது. தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் பிரதமரை வரவேற்க செல்லவில்லை. அவருக்கும் தமிழக முதல்-அமைச்சருக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. அவர் பகிரங்கமாக வெளிக்காட்டினார். தி.மு.க அரசு மறைமுகமாக வெளிப்படுத்துகிறது. இவ்வாறு அவர் கூறினார்.