பாலிவுட் சினிமாவின் மூத்த நடிகரான அமிதாப் பச்சன் மற்றும் ஜெயா பச்சன் தம்பதியின் மகனான அபிஷேக் பச்சன், தனது தந்தையைப் போலவே இந்தி சினிமாவில் மாஸ் ஹீரோவாக இருக்கிறார். இவர் உலக அழகி ஐஸ்வர்யா ராயை திருமணம் செய்து கொண்டார். அவ்வப்போது இவர்கள் குறித்து இணையத்தில் பலவிதமான வதந்திகள் பரவி வரும் நிலையில், ஐஸ்வர்யா ராய் மற்றும் அபிஷேக் பச்சனின் மகள், டெல்லி உயர்நீதிமன்றத்தில் அதிரடியான வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
நடிகை ஐஸ்வர்யா ராய், மணிரத்னம் இயக்கிய இருவர், ஜீன்ஸ், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், ராவணன், எந்திரன் போன்ற பல படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களுக்கு பிடித்தமான நடிகையாக உள்ளார். இவர் தமிழ் மட்டுமில்லாமல் இந்தி, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் நடித்துள்ளார். இவர் அபிஷேக் பச்சனுடன் இணைந்து நடித்த போது இருவருக்கும் இடையே காதல் உருவானதால், அவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிகளுக்கு ஆராத்யா என்ற மகள் உள்ளார். அம்மாவை போல மிகவும் அழகாகவே இருக்கும் ஆராத்யா, சினிமா நிகழ்ச்சி, பிரபலங்களின் கல்யாணம், விருது வழங்கும் விழா என எதுவாக இருந்தாலும் தனது அம்மாவுடன் தவறாமல் கலந்து கொள்கிறார்.
கடந்த சில ஆண்டுகளாக ஐஸ்வர்யா ராய் மற்றும் அபிஷேக் பச்சன் பிரிந்து வாழ்ந்து வருவதாகவும், இருவரும் விவாகரத்து பெற இருப்பதாகவும் பலவிதமான வதந்திகள் இணையத்தில் பரவி வருகிறது. இதற்கு இருவரும் நேரடியாக பதில் அளிக்கவில்லை என்றாலும், மறைமுகமாக பதில் அளித்த போதும், தொடர்ந்து வதந்தி பரவி வருகிறது.
இந்நிலையில், ஐஸ்வர்யா ராயின் மகள் ஆராத்யா சோஷியல் மீடியாக்களில், தன்னை பற்றியும் தனது உடல்நிலை பற்றியும் தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருவதாகவும், இதனால், தான் மன உளைச்சலுக்கு ஆளாவதாகவும், அந்த பதிவினை நீக்க கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், கூகுள், பாலிவுட் டைம் உள்ளிட்ட இணையதளங்களுக்கு பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை மார்ச் 17 ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார். பாலிவுட்டின் முன்னணி நட்சத்திர தம்பதிகளின் மகள், இப்படி ஒரு வழக்கை துணிந்து தொடர்ந்தது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது.