தெலுங்கு படத்தில் நடிக்கும் சூர்யா!

நல்ல கதை அமைந்தால் தெலுங்கு படத்தில் நடிப்பேன் என்று சூர்யா தெரிவித்துள்ளார்.

நடிகர் சூர்யாவின் 44-வது படமான ‘ரெட்ரோ’ படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார். இந்த படம் பீரியாடிக் கேங்ஸ்டர் மற்றும் காதல் பின்னணியை கதைக்களமாக கொண்டு உருவாகி உள்ளது. நடிகை பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்திருக்கும் இப்படத்தில் ஜெயராம், கருணாகரன், ஜோஜு ஜார்ஜ், மற்றும் சுஜித் ஷங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் வருகிற மே 1-ந் தேதி தொழிலாளர் தினத்தில் வெளியாக உள்ளது.

இதற்கிடையில், தமிழில் சூர்யா நடித்த பல படங்கள் தெலுங்கு மொழியில் டப்பிங் செய்து வெளியிடப்பட்டு வருகின்றன. இதன் மூலம் ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் சூர்யாவுக்கு அதிக ரசிகர்கள் சேர்ந்து இருக்கிறார்கள். நேரடி தெலுங்கு படத்தில் நடிக்க வேண்டும் என்பது எனது கனவு. நல்ல கதை அமைந்தால் தெலுங்கு படத்தில் நடிப்பேன் என்று சூர்யா பேசி வந்தார்.

இந்த நிலையில் சந்து மொண்டேட்டி இயக்கும் தெலுங்கு படத்தில் சூர்யா நடிப்பது உறுதியாகி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து சந்து மொண்டேட்டி கூறும்போது, ”நான் இயக்கிய கார்த்திகேயா 2 படம் சூர்யாவுக்கு மிகவும் பிடித்துப் போனது. இருவரும் சேர்ந்து படம் செய்யலாம் என்று எனக்கு வாக்குறுதி கொடுத்துள்ளார். சூர்யாவிடம் இரண்டு கதைகளை சொல்லி இருக்கிறேன். இரண்டுமே அவருக்கு பிடித்துள்ளது. இதில் ஒரு கதையை இறுதி செய்வார்” என்றார்.