சின்ன திரை நடிகை ரோஷினி ஹரிப்ரியன் விஜய் சேதுபதி படத்தில் நடித்துள்ளார். இதற்கு முன்பு சூரி நடிப்பில் வெளியான கருடன் படத்தில் நடித்திருந்த நிலையில், தற்போது விஜய் சேதுபதி படத்தில் நடித்து வருகிறார்.
விஜய் தொலைக்காட்சியில் 2019-ல் ஒளிபரப்பான பாரதி கண்ணம்மா தொடரில் நாயகியாக நடித்ததன் மூலம் சின்ன திரையில் அறிமுகமானவர் ரோஷினி ஹரிப்ரியன். 2021 வரை இந்தத் தொடர் ஒளிபரப்பானது.
இத்தொடரில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரிலும் நடித்தார். சிறப்புத் தோற்றத்தில் சில நாள்களுக்கு மட்டுமே இதில் நடித்திருந்தார்.
பட வாய்ப்புகளுக்காக முயற்சித்துக் கொண்டிருந்த வேளையில், மீண்டும் விஜய் தொலைக்காட்சியில் வாய்ப்பு கிடைத்தது. குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் சமையல் கலைஞராக பங்கேற்று மக்கள் மனங்களைக் கவர்ந்தார். அதில் கிடைத்த ரசிகர்கள் பட்டாளம் இவருக்கு வெள்ளித்திரை வாய்ப்பையும் பெற்றுத்தந்தது. சூரி நாயகனாக நடித்த கருடன் படத்தில் ரோஷினி நடித்திருந்தார். இதில், இவரின் நடிப்பு பலரால் பாராட்டப்பட்டது.
இதனைத் தொடர்ந்து தற்போது விஜய் சேதுபதி – இயக்குநர் பாண்டிராஜ் கூட்டணியில் உருவாகிவரும் புதிய படத்தில் ரோஷினி நடித்துவருகிறார். இதில் நித்யா மெனன் முதன்மை நாயகியாக நடிக்க, ரோஷினி முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன. ரசிகர்கள் பலர் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.