கணவரை விவாகரத்து செய்த நடிகை சம்யுக்தா!

வாரிசு படத்தின் மூலம் பிரபலமான நடிகை சம்யுக்தா தனது கணவரை விவாகரத்து செய்துள்ளதாக அறிவித்துள்ளார்.

சிறுவயதில் இருந்தே மாடலிங் துறையில் கவனம் செலுத்தி வந்த சம்யுக்தா, நடிகை ராதிகா இயக்கிய சந்திரகுமாரி தொடர் மூலம் சின்ன திரையில் அறிமுகமானார். தொடர்ந்து, பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மக்கள் மனதில் இடம் பிடித்தார். இந்நிகழ்ச்சியில் இவருக்கும் ஆரிக்கும் இடையே ஏற்பட்ட கருத்து மோதல் பெரிதாகப் பேசப்பட்டது. இதனைத் தொடர்ந்து, இவர் விஜய் நடித்த வாரிசு படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். தொடர்ந்து காஃபி வித் காதல், துக்ளக் தர்பார் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

இதனிடையே, இவர் தொழிலதிபர் கார்த்திக் சங்கரை பெற்றோர் விருப்பப்படி முன்னதாக திருமணம் செய்துகொண்டார். இவருக்கு ராயன் என்ற மகனும் இருக்கிறார்.

இந்த நிலையில், நடிகை சம்யுக்தா தனது கணவரை விவாகரத்து செய்துள்ளதாக அறிவித்துள்ளார். அவருடைய இன்ஸ்டாகிராம் பதிவில், “விவாகரத்து தொடர்பான அனைத்து வேலைகளையும் முடித்துவிட்டேன். முன்பைவிட இப்போது நான் வலிமையாக இருப்பதாக உணர்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக, நடிகை சம்யுக்தா பேட்டியொன்றில், தனது கணவருக்கும் வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாகவும் அதனால்தான் அவரிடம் விவாகரத்துப் பெறவு இருப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.