இயக்குநர் ஷங்கரின் சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு இடைக்கால தடை!

எந்திரன் திரைப்பட விவகாரத்தில் இயக்குநர் ஷங்கரின் சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கடந்த 2010ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த படம் எந்திரன். ரஜினிகாந்த், ஐஸ்வர்யா உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவான இந்த படத்தின் கதை தான் எழுதிய ஜூகிபா என்ற கதைதான் என எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன், ஷங்கர் மீது காப்புரிமை இல்லாமல் தனது கதையை படமாக்கி விட்டதாக எழும்பூர் நீதிமன்றத்தில் கடந்த 2011ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்தார். கடந்த 14 ஆண்டுகளாக நடைபெற்று வரும் இந்த வழக்கு இப்போது சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. அதாவது சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கின் அடிப்படையில், அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக இந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி அமைப்பிடம் அறிக்கை பெற்றது. அதில், கதை, கதாபாத்திர வடிவமைப்பு, கதையின் கருப்பொருள் ஆகியவை ஜூகிபா கதையுடன் ஒத்துப் போகிறது என கூறப்பட்டதால், ஷங்கர் கதை திருட்டில் ஈடுப்பட்டார் என அமலாக்கத்துறை தரப்பில் கூறப்பட்டது. இதனால் எந்திரன் படத்தின் கதை, திரைக்கதை வசனம் மற்றும் இயக்கத்திற்காக ஷங்கர் ரூபாய் 11.5 கோடிகள் சம்பளம் பெற்றது விசாரணையில் தெரியவந்தது. இதனால் ஷங்கருக்கு சொந்தமான ரூபாய் 10.11 கோடிகள் மதிப்பிலான மூன்று அசையா சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியது. இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஷங்கர் வழக்கு தொடுத்தார். எந்திரன் திரைப்பட விவகாரத்தில் இயக்குநர் ஷங்கரின் சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

எந்திரன் திரைப்பட கதை விவகாரத்தில் இயக்குநர் ஷங்கர் காப்புரிமை சட்டத்தை மீறியுள்ளதாக கூறி அந்த படத்திற்கு பெற்ற சம்பளத்தின் மூலம் ஷங்கர் வாங்கிய அசையா சொத்துக்களை முடக்க அமலாக்கத்துறை உத்தரவிட்டது. அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு எதிராக இயக்குநர் ஷங்கர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த மனு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், என்.செந்தில்குமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஷங்கர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், எந்திரன் படத்தின் கதை விவகாரத்தில் ஷங்கர் காப்புரிமை சட்டத்தை மீறவில்லை. ஆரூர் தமிழ்நாடன் தாக்கல் செய்த மனுவில் சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி தீர்ப்பளித்துள்ள நிலையில் அமலாக்கத்துறை இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறினார். எந்திரன் திரைப்படத்தின் கதைக்காக மட்டும் 11.5 கோடி ரூபாய் ஊதியத்தை ஷங்கர் பெறவில்லை எனவும், மற்ற பணிகளுக்காகவும் பெற்றுள்ள நிலையில் சொத்துக்களை அமலாக்கத்துறை எப்படி முடக்க முடியும்? என கேள்வி எழுப்பினார்.

தனிநபர் அளித்த புகாரின் அடிப்படையில் குற்றம் நடந்துள்ளதாக கூறி வழக்கு பதிவு செய்ய முடியுமா? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும், தனி நீதிபதி ஷங்கருக்கு ஆதரவாக தீர்ப்பளித்துள்ள நிலையில் புகாரின் இறுதி முடிவுக்காக காத்திருக்காமல் நடவடிக்கை எடுத்தது ஏன் என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த அமலாக்கத்துறை வழக்கறிஞர் என்.சிபி விஷ்ணு தனிநபர் புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யலாம் எனக் கூறினார். மேலும், அமலாக்கத்துறை நடவடிக்கை மூலம் இயக்குநர் ஷங்கருக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை எனவும், இந்த வழக்கை அமலாக்கத்துறையிடம் அவர் எதிர் கொள்ளலாம் எனவும் தெரிவித்தார். இதையடுத்து, இயக்குநர் ஷங்கரின் சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு இடைக்கால தடை விதித்த நீதிபதிகள் மனு குறித்து அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஏப்ரல் 21ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.