கடலோர பகுதியில் வாழும் மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்: ரஜினிகாந்த்!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் கூலி திரைப்படத்தில் பிஸியாக நடித்து வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், திடீரென விழிப்புணர்வு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், நாட்டின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு கடலோர பகுதியில் வாழும் மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள அந்த வீடியோவில், அனைவருக்கும் வணக்கம், நம்ம நாடு மற்றும் மக்களின் நற்பெயர் அதனை கெடுக்க பயங்கரவாதிகள் கடல் வழியாக நாட்டிற்குள் புகுந்து, கோர சம்பவங்கள் செய்வார்கள். அதற்கு உதாரணம் மும்பையில் 26/11ல் நடந்த கோர சம்பவம். இந்த சம்பவத்தில் கிட்டத்தட்ட 175 பேரின் உயிரை வாங்கிடுச்சு. இந்த கடலோர பகுதியில் வாழும் மக்கள் விழிப்புணர்வோடு இருந்து, சந்தேகத்திற்குரிய மக்கள் யாராவது நடமாடினால், அருகில் இருக்கும் போலீஸ் ஸ்டேஷனிற்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

இதுகுறித்து ஒரு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்த, சி.ஐ.எஸ்.எப், வீரர்கள் 100 பேர் கிட்டத்தட்ட 7 ஆயிரம் கிலோ மீட்டர் மேற்குவங்கத்தில் இருந்து கன்னியாகுமரி வரை சைக்கிளில் பயணம் செய்வார்கள். அவர்கள் உங்கள் ஏரியாவிற்கு வரும் போது அவர்களை வரவேற்று, முடிந்தால் அவங்களுடன் கொஞ்சம் தூரம் நடந்து சென்று, உற்சாகப்படுத்துங்க. நன்றி என கூறியிருந்தார்.

ரஜினியின் இந்த வீடியோ பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், இணையவாசிகள் பலரும் தங்கள் கருத்துக்களை அந்த வீடியோவிற்கு கீழே பகிர்ந்து வருகின்றனர்.