பாஸ்போர்ட் மோசடி வழக்கில் நடிகை ஷர்மிளா தாபா மீது வழக்குப்பதிவு!

பாஸ்போர்ட் மோசடி வழக்கில் துணை நடிகையும், பிரபல சின்னத்திரை ஆங்கருமான நேபாள நாட்டை சேர்ந்த ஷர்மிளா தாபா மீது சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

2011 முதல் 2021 வரை 10 ஆண்டுகள் சென்னை அண்ணாநகர் முகவரி ஆவணம் கொடுத்து இந்திய பாஸ்போர்ட் வைத்திருந்த நிலையில், பாஸ்போர்ட் காலாவதியான நிலையில் மீண்டும் வியாசர்பாடி முகவரி கொடுத்து விண்ணப்பித்துள்ளார். இந்நிலையில், பாஸ்போர்ட்டில் முறைகேடு இருப்பதால் நடிகை ஷர்மிளா தாபா மீது உள்துறை அமைச்சகம் கீழ் செயல்படும் வெளி நாட்டினர் மண்டல பதிவு அலுவலகம் தரப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நேபாள நாட்டைச் சேர்ந்த ஷர்மிளா தாபா பிரபல தொலைக்காட்சிகளில் காமெடி ஷோக்கள் மூலம் பிரபலமானார். தொடர்ந்து திரை துறையிலும் கால் பதித்தார். நடிகர் அஜித்தின் விசுவாசம், வேதாளம், ஜெயம் ரவி நடித்த சகலகலா வல்லவன் உள்ளிட்ட படங்களிலும் நடித்திருக்கிறார். தொடர்ந்து தற்போது சினிமாவிலும், தொலைக்காட்சியிலும் பிசியாக நடித்து வருகிறார்.

இந்த நிலையில் தனது பாஸ்போர்ட் காலாவதி ஆன நிலையில் மீண்டும் வழங்க வேண்டும் என ஷர்மிளா தாபா விண்ணப்பித்ததாக கூறப்படுகிறது. அதில் அவரது வீட்டு முகவரியாக அண்ணா நகர் முகவரியை ஆவணமாக கொடுத்திருந்தார். மேலும் ஆதார் உள்ளிட்ட அடையாள அட்டைகளையும் அவர் சமர்ப்பித்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேபாள நாட்டைச் சேர்ந்த ஷர்மிளா தாபா இந்திய குடியுரிமை பெற்றது எப்படி? மேலும் ஆதார் உள்ளிட்ட இந்திய ஆவணங்கள் அவருக்கு வழங்கப்பட்டது எப்படி என கேள்வி எழுந்தது. இது தொடர்பாக விசாரிக்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் வெளிநாட்டினர் மண்டல பதிவு அலுவலகம் தரப்பில் புகார் அளிக்கப்பட்டது. இது தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து மோசடி மற்றும் பாஸ்போர்ட் சட்டம், உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நேபாள நாட்டை பூர்விகமாக கொண்ட ஷர்மிளா தாபா நடன உதவி இயக்குனரான ரகு என்பவரை திருமணம் செய்து கொண்டு சென்னையில் வசித்து வருகிறார். பூர்வீகம் நேபாளம் என்றாலும் தமிழை சரளமாக பேசக் கூடிய இவர், பிரபல நடிகையான அர்ச்சனா மூலம் சின்னத்திரைக்கு வந்தார். அதற்கு பிறகு சன் குழுமத்தின் ஆதித்யா தொலைக்காட்சியில் இணைந்து பணியாற்றினார். அதற்கு பிறகு ஆதவன் உள்ளிட்ட பல சின்னத்திரை பிரபலங்களுடன் இணைந்து நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். அதற்கு பிறகு சினிமா துறையில் அவர் கால் வைத்து விவேக், சூரி உள்ளிட்ட நடிகர்களுடம் இணைந்து காமெடியில் கலக்கியது குறிப்பிடத்தக்கது.

ஷர்மிளா தாபாவின் கணவர் ரகு பிருந்தா, பாபா பாஸ்கர் என பல பிரபல நடன இயக்குனர்களிடம் உதவி இயக்குனராக பணியாற்றி இருக்கிறார். 10 வருட காதலுக்கு பிறகு ரகு ஷர்மிளா தாபாவின் திருமணம் 2019ஆம் ஆண்டு பெற்றோர் சம்மதத்துடன் சென்னையில் நடைபெற்றது. அதற்குப் பிறகு கணவருடன் வசித்து வந்த நிலையில் அவருக்கு இந்திய ஆவணங்கள் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் நேபாள நாட்டைச் சேர்ந்த ஷர்மிளா தாபாவுக்கு இந்திய ஆவணங்கள் எப்படி வழங்கப்பட்டது என்பது சர்ச்சையான நிலையில் தான் தற்போது அவர் மீது எஃப்ஐஆர் பதியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.