காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலை மத வெறுப்பாக திசைதிருப்பாதீர்கள் என்று நடிகை ஆண்ட்ரியா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
காஷ்மீரின் முக்கிய சுற்றுலாத் தலமான பகல்காம் என்ற இடத்தில் நேற்று பயங்கரவாதிகள் சுற்றுலாப் பயணிகளை குறி வைத்து திடீர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதல் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பல்வேறு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
இந்த நிலையில், “மதத்துக்கு எதிரான வெறுப்புகளுக்கு நாம் இரையாகிவிடக்கூடாது” என நடிகை ஆண்ட்ரியா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில், “பகல்காம் பயங்கரவாத தாக்குதலால் பாதிக்கப்பட்டோரின் குடும்பங்களின் நிலையறிந்து மனமுடைந்து போனேன். நாடு ஏற்கெனவே பிரிவினையை நோக்கி செல்லும் ஒரு இக்கட்டான தருணத்தில் உள்ளது. இச்சம்பவத்தினை ஒரு குறிப்பிட்ட மதம் / சமூகத்திற்கு எதிரான வெறுப்பாகத் திசைதிருப்பாமல் இருப்பது ஒரு குடிமக்களாக நமது கடமை என வேண்டுகோள் வைத்துள்ளார். மேலும் நான் என் கருத்தை அடிக்கடி சொல்பவள் அல்ல. ஆனால் இந்த சூழலில் இதைச் சொல்ல வேண்டும் என உணர்ந்தேன்” என்று பதிவிட்டுள்ளார்.
