‘இது உங்களின் எத்தனையாவது காதலர்’ என்று கேட்டாலும் நான் வருந்துவதில்லை: ஸ்ருதிஹாசன்!

கடந்த வந்த காதலும் முறிவுகளும் குறித்து நடிகை ஸ்ருதிஹாசன் மனம் திறந்து பதிலளித்துள்ளார்.

இது குறித்து நடிகை ஸ்ருதிஹாசன் அளித்த பேட்டி ஒன்றில், ‘வாழ்க்கையில் ஏதேனும் வருத்தங்கள் உள்ளதா?’ என்ற கேட்கப்பட்டது. அதற்கு, “நான் சிலரை புண்படுத்தியிருக்கிறேன். அப்படிச் செய்யாது இருந்திருக்கலாம். ஆனாலும், அதில் எனக்கு வருத்தம் எல்லாம் இல்லை. சில நேரங்களில் கோமாளி போல் நடந்து கொண்டிருந்திருக்கிறேன். அவ்வளவே. அது ஒன்றும் பிரச்சினையில்லை. ஆனால், என் வாழ்வில் சில மதிப்புமிகு நபர்கள் இருந்துள்ளனர். அவர்களை நான் தெரியாமல் காயப்படுத்தியிருக்கிறேன். இப்போது அவர்களிடம் மன்னிப்பு கேட்பதில் கவனம் செலுத்துகிறேன்.

நம் அனைவருக்குமே நம் வாழ்வில் ஓர் ஆபத்தான முன்னாள் காதல் இருந்திருக்கும். என் வாழ்வில் எல்லா அத்தியாயங்களையுமே நான் எவ்வித வருத்தமும் இன்றியே முடித்திருக்கிறேன். அதனால்தான் என்னிடம் யாராவது, ‘இது உங்களின் எத்தனையாவது காதலர்’ என்று கேட்டாலும் நான் வருந்துவதில்லை. அவர்களுக்கு அது வெறும் எண்ணிக்கை. எனக்கு நான் விரும்பும் காதலை பெறுவதற்கான எத்தனையாவது முயற்சி என்ற கணக்கு. அதனால் எனக்கு அதில் பெரிதாக கவலை இல்லை. ஆனால், ஒரு மனுஷியாக சிறு வருத்தம் ஏற்பட்டது உண்டு” என்று தெரிவித்தார்.

மேலும், தனது முந்தைய காதல் முறிவுகளுக்கு தன்னுடைய பார்ட்னர்களைக் குறைகூற விரும்பவில்லை என்றும் நடிகை ஸ்ருதிஹாசன் தெரிவித்துள்ளார். ‘சலார் 2’, ரஜினியின் ‘கூலி’, விஜய்யின் ‘ஜன நாயகன்’ என முக்கிய படங்களில் ஸ்ருதி ஹாசன் கவனம் செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.