தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் நடிகர் விஜய் தேவரகொண்டா, நடிகர் சூர்யா நடிப்பில் வெளியாகி உள்ள ‛ரெட்ரோ’ திரைப்படம் தொடர்பான நிகழ்ச்சியில் பழங்குடியினர் பற்றி பேசிய கருத்தால் சர்ச்சையில் சிக்கினார். பழங்குடியினரை அவமதிக்கும் வகையில் அவர் பேசியதாக பரபரப்பான புகார்கள் முன்வைக்கப்பட்ட நிலையில் நடிகர் விஜய் தேவரகொண்டா மீது எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் போலீசார் அதிரடியாக வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
நடிகர் சூர்யா நடிப்பில் வெளியாகி உள்ள திரைப்படம் ‛ரெட்ரோ’. இந்த திரைப்படம் வெளியாவதற்கு முன்பு ஹைதரபாத்தில் நடந்த நிகழ்ச்சியில் நடிகர் விஜய் தேவரகொண்டா பங்கேற்றார். மேடையில் நடிகர் சூர்யா இருக்கும்போதே நடிகர் விஜய் தேவரகொண்டா பேசிய கருத்து சர்ச்சையை கிளப்பியது. பகல்காம் தாக்குதல் தொடர்பாக பேசிய விஜய் தேவரகொண்டா, பழங்குடியின மக்களை அவமதிக்கும் வகையில் கருத்து தெரிவித்து இருந்தார். இது விவாதத்தை கிளப்பியது. அதாவது விஜய் தேவரகொண்டா பேசும்போது, ‛‛தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தனது இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். காஷ்மீர் மக்கள் நம்மைப் போன்றவர்கள். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ‘குஷி’ படத்தின் படப்பிடிப்புக்காக காஷ்மீர் சென்றிருந்தேன்.அவர்களுடன் எனக்கு நல்ல நினைவுகள் உள்ளது. பாகிஸ்தானால் சொந்த நாட்டு மக்களை கூட கவனிக்க முடியவில்லை. அவர்கள் நம் நாட்டில் தாக்குதல் நடத்துகிறார்கள். இது தொடர்ந்தால் பாகிஸ்தான் மக்களே வெறுப்படைந்து தங்கள் அரசை தாக்கி விடுவார்கள். பாகிஸ்தான் குறைந்தபட்ச பொது அறிவு இல்லாமல் 500 ஆண்டுகளுக்கு முன்பு பழங்குடியினர் போல நடந்துக்கொள்கிறார்கள். நாம் ஒற்றுமையாக இருக்க வேண்டும்” என்று கூறினார்.
இதில் பழங்குடியினர் போல் பொது அறிவு இன்றி பாகிஸ்தான் நடந்து கொள்கிறார்கள் என்று விஜய் தேவரகொண்டா பேசியது தான் சர்ச்சையை கிளப்பியது. விஜய் தேவரகொண்டாவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து அவர் மன்னிப்பு கோரினார். அதுமட்டுமின்றி பழங்குடியின மக்களை அவமதிக்கும் நோக்கத்தில் நான் பேசவில்லை என்றும் கருத்து தெரிவித்து இருந்தார். இருப்பினும் ஹைதராபாத்தில் உள்ள போலீஸ் நிலையங்களில் விஜய் தேவரகொண்டா மீது வழக்குப்பதிய வேண்டும் என்று புகார் அளிக்கப்பட்டது. பழங்குடி மக்களை அவமதிக்கும் கருத்துகளை அவர் பேசியுள்ளார். இது ஏற்க முடியாது. அவர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகாரில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
குறிப்பாக தேசிய பஞ்ஜாரா மிஷன் இந்தியாவின் மேட்சல் மாவட்டத் தலைவர் ரவிராஜ் ரத்தோட் கீசரா காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.அதேபோல் பழங்குடியின வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவர் கிஷன் ராஜ் சௌஹான், ஹைதராபாத்தில் உள்ள எஸ்.ஆர்.நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரை தொடர்ந்து எஸ்ஆர் நகர் போலீசார் விஜய் தேவரகொண்டா மீது எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இது விஜய் தேவரகொண்டாவுக்கு பிரச்சனையை ஏற்படுத்தி உள்ளது.
