நடிகர் சிவாஜி கணேசனின் அன்னை இல்லம் வீட்டை ஜப்தி செய்து பிறப்பித்த உத்தரவை தனி நீதிபதி ரத்து செய்ததற்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துள்ளது. மேல் முறையீட்டு வழக்கில் நடிகர் பிரபு, ராம்குமார் உள்ளிட்டோர் பதில் அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடிகர் சிவாஜி கணேசனின் பேரனும், நடிகருமான துஷ்யந்த், அவரது மனைவி அபிராமி ஆகியோர் பங்குதாரர்களாக உள்ள ஈசன் புரொடக்சன்ஸ் நிறுவனம் சார்பில் நடிகர் விஷ்ணு விஷால், நடிகை நிவேதா பெத்துராஜ் உள்ளிட்டோர் நடிப்பில் ஜகஜால கில்லாடி என்ற படத்தை தயாரித்தனர். இந்தப் பட தயாரிப்புக்காக தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் நிறுவனத்திடம், 3 கோடியே 74 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியிருந்தனர். இந்த கடன், மற்றும் வட்டியுடன் சேர்த்து 9 கோடியே 39 லட்சம் ரூபாயை செலுத்தவில்லை என்பதால் தனபாக்கியம் நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதனையடுத்து இந்த பிரச்சனை தொடர்பாக முடிவெடுக்க மத்தியஸ்தர் நியமிக்கப்பட்டார். மத்தியஸ்தர் விசாரித்து கடனை திரும்ப செலுத்தற்கு ஏதுவாக ஜகஜால கில்லாடி படத்தின் அனைத்து உரிமைகளையும், தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் நிறுவன நிர்வாக இயக்குனரிடம் ஒப்படைக்கும்படி மத்தியஸ்தர் கடந்த 2024 ஆம் ஆண்டு மே 4 ஆம் தேதி உத்தரவிட்டார்.
இந்த உத்தரவின்படி படத்தின் அனைத்து உரிமைகளையும் வழங்காததை அடுத்து மத்தியஸ்தர் தீர்ப்பை அமல்படுத்தும் வகையில், ராம்குமார் மற்றும் அவரின் தந்தையான சிவாஜி கணேசனின் வீட்டை ஜப்தி செய்து, பொது ஏலம் விட உத்தரவிடக் கோரி, தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தது. இந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி அப்துல் குத்தூஸ், அன்னை இல்லம் வீட்டை ஜப்தி செய்ய இடைக்கால உத்தரவு பிறப்பித்து இருந்தார். ஆனால் அன்னை இல்லம் வீடு தனக்கு சொந்தமானது என்றும், தனது தந்தை சிவாஜி கணேசன் தனது பெயருக்கு உயில் எழுதி வைத்துள்ளதால் இந்த வீட்டை ஜப்தி செய்து பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றும், தான் யாரிடம் எந்த கடனும் பெறாத நிலையில் அன்னை இல்லம் வீட்டை ஜப்தி செய்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என நடிகர் பிரபு உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி அப்துல் குத்தூஸ், வழக்கு தொடர்பான ஆவணங்களை ஆய்வு செய்ததில், அன்னை இல்லம் வீட்டின் முழு உரிமையாளர் பிரபு என்றும் அதனால் அவரது வீட்டை ஜப்தி செய்த உத்தரவை ரத்து செய்வதாகவும் உத்தரவிட்டார். மேலும் ஜப்தி செய்த உத்தரவு ரத்து செய்யப்பட்டது குறித்து வில்லங்கப் பதிவில் திருத்தம் செய்யும்படி பதிவுத்துறைக்கு நீதிபதி அப்துல் குத்தூஸ் உத்தரவிட்டிருக்கிறார்.
தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. அதில் தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்து அன்னை இல்லம் வீட்டை மீண்டும் ஜப்தி செய்ய உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தது. இந்த வழக்கு உயர் நீதிமன்ற நீதிபதிகள் என்.மாலா மற்றும் நீதிபதி ஜி.அருள் முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தனபாக்கியம் நிறுவனம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தனி நீதிபதி சொத்து யாருடையது என்பது தொடர்பான முழுமையான விசாரணையை முடிக்காமல் இடைக்கால உத்தரவை திரும்ப பெற்று இருப்பதாகவும், அன்னை இல்லத்தின் உரிமை என்பது முழுமையான விசாரணைக்கு பிறகு முடிவு செய்ய முடியும் எனவும் இதனை இடைக்கால மனு மீது முடிவு செய்ய முடியாது. எனவே தனி நீதிபதி உத்தரவிற்கு தடை விதிக்க வேண்டும் என வாதிட்டார்.
நடிகர் பிரபு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், தங்கள் தரப்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தை ஏற்று ஜப்தி நடவடிக்கைகள் கைவிடப்பட்டதாகவும், இதில் எந்த விதமான தவறும் இல்லை எனவும் வாதிட்டார். அனைத்து தரப்பு வாதங்களுக்கு பிறகும், தனி நீதிபதியின் உத்தரவிற்கு தற்போது எந்த தடையும் விதிக்க முடியாது என தெரிவித்து மேல் முறையீட்டு மனு குறித்து நடிகர் பிரபு, ராம்குமார் உள்ளிட்டோர் பதில் அளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணை ஜூன் மூன்றாம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளனர்.