மலையாளம், தெலுங்கில் நடித்து வந்த கயாடு லோஹருக்கு அங்கே பெரிதாக முக்கியத்துவம் கிடைக்காத நிலையில், பிரதீப் ரங்கநாதனின் டிராகன் படத்தில் அறிமுகமான அவருக்கு கோலிவுட்டில் சிகப்பு கம்பள வரவேற்பு கிடைத்துள்ளது. கயாடு லோஹர் தான் வேண்டும் என முன்னணி நடிகர்கள் அடம்பிடித்து வருவதாக கோடம்பாக்கத்தில் பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.
25 வயதாகும் கயாடு லோஹர் தான் தற்போது கோலிவுட் ரசிகர்களின் கிரஷ்ஷாக மாறியுள்ளார். சிம்ரன், ஜோதிகா, த்ரிஷா, நயன்தாரா, ஹன்சிகா வரிசையில் லேட்டஸ்ட் கனவுக்கன்னியாகவே மாறியுள்ளார் கயாடு லோஹர். 2021ம் ஆண்டு வெளியான கன்னட படமான முகில்பேட் படத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமான இவர், மலையாளத்தில் பத்தொன்பதாம் நூற்றாண்டு, தெலுங்கில் அல்லூரி, மராத்தியில் ஐ பிரேம் யூ, மீண்டும் மலையாளத்தில் ஒரு ஜாதி ஜாதகம் உள்ளிட்ட படங்களில் நடித்து வந்தார். அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், அனுபமா பரமேஸ்வரன் நடித்த டிராகன் படத்தில் வழித்துணையாக வந்த கயாடு லோஹர் ஒரே ஒரு ட்ரீம் சாங்கிலேயே உச்சத்துக்கு சென்று விட்டார். தமிழில் அவர் நடித்த முதல் படமே 150 கோடி வசூலை ஈட்டிய நிலையில், அரை டஜன் படங்கள் வரிசைக் கட்டி அவருக்காக காத்திருக்கின்றன. ஏகப்பட்ட பழைய இளம் நடிகைகள் எல்லாம் சினிமாவில் இருந்து ஆள் அட்ரஸே தெரியாமல் காணாமல் போய் வரும் நிலையில், இவரை சுற்றி இப்படி இத்தனை பேர் மொய்க்கின்றனரே என கண் வைத்தும் வருகின்றனர்.
டிராகன் படத்தைத் தொடர்ந்து இதயம் முரளி படத்தின் ரிலீஸுக்காக காத்திருக்கும் கயாடு லோஹர் அடுத்ததாக ஜி.வி. பிரகாஷ் குமார் நடிப்பில் உருவாகி வரும் இம்மார்டல்ஸ் படத்தில் பாத் டப்பில் எல்லாம் இறங்கி நடிக்க ஆரம்பித்துவிட்டார். அடுத்ததாக சிம்புவின் 49வது படத்திலும் இவர் தான் ஹீரோயின் என அறிவிப்பு வெளியாகி பட பூஜையும் போட்டாச்சு. இந்நிலையில், போர் தொழில் படத்தை இயக்கிய விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ் நடிக்கவுள்ள புதிய படத்திலும் கயாடு லோஹர் தான் ஹீரோயின் என பேச்சுவார்த்தைகள் அடிபட்டு வருகிறது. மேலும், லப்பர் படந்து இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் தனுஷ் நடிக்கப் போகும் படத்துக்கும் கயாடு லோஹர் தான் ஹீரோயின் என பேச்சுவார்த்தைகள் ஓடிக் கொண்டிருப்பதாக கூறுகின்றனர்.
