விஜய் சேதுபதியுடன் நடிக்க பயந்தேன்: நடிகை ருக்மினி வசந்த்!

விஜய் சேதுபதிக்கு இணையாக ஹீரோயினாக நடிக்கமுடியவில்லை என்றாலும், அதை ஓரளவுக்கு மேட்ச் செய்தால் போதும் என்று நினைத்தேன். அது ஒரு பெரிய கடமை என நினைத்தேன். ஆனால், அவர் கூட கோ ஸ்டாராக நடிக்கும்போது, அவர் ரொம்ப உறுதுணையாக இருந்தார்’ என நடிகை ருக்மினி வசந்த் கூறியிருக்கிறார்.

ருக்மினி வசந்த் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்த ஏஸ் திரைப்படம் வெளியாகி இருக்கிறது. இதுதொடர்பாக, ருக்மினி வசந்த் அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:-

கேள்வி: உங்களுக்கு நடிப்பு எங்கு இருந்து ஆரம்பிச்சது?

ருக்மினி வசந்த்: என்னுடைய அம்மா பரதநாட்டிய நடனக்கலைஞர். சின்ன வயதில் அவங்க பிராக்டீஸ் செய்யும்போது, கூடவே இருந்து பார்ப்பேன். அவங்களுக்குக் கிடைக்கிற பாராட்டுகளைப் பார்த்திட்டு, நான் ஸ்கூலில் நடிக்க ஆரம்பிச்சேன். அந்த மூட்டைப்பூச்சி என்னை வலுவாக கடிச்சிருச்சு. எனக்கு நடிக்கிறது பிடிக்கும். மக்களும் பாராட்டுவாங்க. பிறகு, எதற்கு நடிக்கக்கூடாது. அப்படி தான் வந்தேன்.

கேள்வி: எப்படி ஏஸ் படத்தில் வந்தீங்க?

ருக்மினி வசந்த்: 2022-ல் ஒரு போன் கால் வந்தது. அப்போது விஜய் சேதுபதி சார் ஹீரோவாக நடிக்கிறார். ஆறுமுக குமார் சார் இயக்குகிறார் என போனில் சொன்னாங்க. அப்படிதான், இதுதொடங்கியது. அதற்கப்புறம், ஆடிசன், லுக் டெஸ்ட் எல்லாமே முடிஞ்சு, எனக்கு இந்தப் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

கேள்வி: விஜய் சேதுபதி கூட நடிக்கப்போறதாக சொன்னதும் என்ன நினைச்சீங்க?

ருக்மினி வசந்த்: நான் ரொம்ப பயந்தேன். ஏனென்றால், நான் ரொம்ப சின்னப்பொண்ணு. எனக்குத் தெரியும் அவர் ரொம்ப திறமையான நடிகர் என்று. அவருக்கு இணையாக ஹீரோயினாக நடிக்க முடியவில்லை என்றாலும், அதை ஓரளவுக்கு மேட்ச் செய்தால் போதும் என்று நினைத்தேன். அது ஒரு பெரிய கடமை என நினைத்தேன். ஆனால், அவர் கூட கோ ஸ்டாராக நடிக்கும்போது, அவர் ரொம்ப உறுதுணையாக இருந்தார்.

கேள்வி: நீங்க அவர்கிட்டயிருந்து என்ன கத்துக்கிட்டீங்க? என்ன விஷயங்களில் எல்லாம் உறுதுணையாக இருந்திருக்கார்?

ருக்மினி வசந்த்: விஜய் சேதுபதி சார் அவரைப் பார்க்க வரும் ரசிகர்கள் எல்லோருக்கும் மதிப்பு கொடுக்கிறார். மலேசியாவில் சூட் செய்யும்போது, அவரைப் பார்க்க நிறைய ரசிகர்கள் வந்தனர். அப்போது அவர்கள் எல்லோரையும் விஜய் சேதுபதி சார் மீட் பண்ணுவாங்க. எல்லோருக்கும் சூட்டிங் முடிச்சிட்டு வந்ததும் ரொம்ப களைப்பாக இருக்கும். ஆனால், விஜய் சேதுபதி ரசிகர்களைப் பார்த்ததும் ரொம்ப உற்சாகமாகி, போட்டோ மற்றும் வீடியோக்கள் எடுத்துக்கொடுப்பார். அதெல்லாம், அவர்கிட்ட இருந்து கத்துக்கணும்.

கேள்வி: விஜய் சேதுபதி சொல்லிக்கொடுத்த விஷயம்?

ருக்மினி வசந்த்: விஜய் சேதுபதி ஸ்கிரிப்ட்டில் கூட இன்வால்வ் ஆகத்தான் இருந்தார். அவரே நிறைய பரிந்துரைகளை சொல்வார். இந்த சீனை இப்படி கட் பண்ணிடலாம். இந்த சீனை இப்படி எடுக்கலாம்ன்னு சொல்வார். இப்படி வசனம் பேசலாம் என்று சொல்வார். இப்படி செய்தால், காமெடி இன்னும் கொஞ்சம் நல்லாயிருக்கும்ன்னு சொல்வார்.

கேள்வி: உங்களுக்கு மட்டுமில்லாமல் துணைநடிகர்களுக்கும் பரிந்துரைகளை விஜய் சேதுபதி செய்திருக்காரா?

ருக்மினி வசந்த்: ஆமா. சரியான உதாரணத்தை என்னால் சொல்லமுடியவில்லை. ஆனால் கண்டிப்பாக நடந்திருக்கலாம். தன்னுடைய யோசனையையும் சொல்வது நல்லது.

கேள்வி: நீங்கள் பேசும் தமிழுக்கு, 10-ல் நீங்கள் அளிக்கும் மதிப்பெண்?

ருக்மினி வசந்த்: என்னுடய தமிழுக்கு நான் இரண்டு மதிப்பெண்கள் தான் அளிப்பேன். எனக்கு கொஞ்சம் கொஞ்சம் தான் தமிழ் தெரியும். நான் தமிழில் பேச முயற்சிக்கிறேன். ஒரு வேளை, 5ஆவது மற்றும் ஆறாவது படத்தில் இன்னும் என்னுடைய தமிழ் மேம்படலாம்.

கேள்வி: ஏஸ் படத்தில் என்னை மாதிரியான கதாபாத்திரம்?

ருக்மினி வசந்த்: ஏஸ் படத்தில் மலாய் தமிழ் பேசும் பெண் கதாபாத்திரம். அதற்காக நான் கத்துக்கிட்டேன். அந்த கதாபாத்திரத்தின் பெயரும் ருக்மணி தான். இவ்வாறு ருக்மினி வசந்த் கூறியிருக்கிறார்.