சென்னையில் அண்மையில் நடைபெற்ற ‘தக் லைஃப்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் பேசும்போது, “தமிழில் இருந்து பிறந்ததுதான் கன்னடம்”என குறிப்பிட்டார். இதற்கு கர்நாடக முதல்வர் சித்தராமையா, பாஜக மாநில தலைவர் விஜயேந்திரா மற்றும் கன்னட அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில் நேற்று பெங்களூருவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் சிவராஜ் குமார் பேசியதாவது:-
கன்னட மொழி மீதும் பெங்களூரு மாநகரின் மீதும் கமல்ஹாசன் மிகுந்த மதிப்பு கொண்டிருக்கிறார். நான் அவருடைய பெரிய ரசிகன். இந்தவிவகாரம் குறித்து 100 சதவீதம் உரிய விளக்கத்தை கொடுப்பார். கன்னட மொழியின் மீதான பாசம் என்பது வாழ்க்கை முழுவதும் இருக்க வேண்டும். எங்கு சென்றாலும் கன்னடத்தை நேசிக்க வேண்டும். கேமரா முன்பாக மட்டும் நேசிக்க கூடாது. வெறும் பேச்சுக்காக கன்னட பாசத்தை கேமரா முன்பாக காட்ட கூடாது.
இங்கே கன்னடத்துக்காக பேசுவதாக சொல்பவர்கள் கன்னட திரையுலகுக்கு என்ன செய்தார்கள் என யோசித்து பார்க்க வேண்டும். பத்திரிகையாளர்கள் பெரிய நடிகர்களின் படத்துக்கு மட்டும் ஆதரவாக செயல்படுகிறார்கள். புதிய நடிகர்களின் படங்களுக்கு முன்னுரிமை கொடுக்கிறார்களா? கமல்ஹாசன் ஏற்கெனவே கன்னட திரையுலகுக்கு நிறைய பங்களிப்பு செய்துள்ளார். அவரை பற்றி நிறைய பேச வேண்டியதில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.