நடிகை என்றால் ஈசியா தொடலாமா?: நித்யா மேனன்!

நடிகை நித்யா மேனன் சமீபத்தில் பேசிய பேட்டி தான் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது “சாதாரண பெண்களைப் போல எங்களை (நடிகைகளை) எல்லோரும் பார்ப்பதில்லை. எல்லோரும் எங்கள் அனுமதி இல்லாமல் கை கொடுக்க வேண்டும் என்று சொல்கிறார்கள்” என்று தன் கோபத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.

தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் என்று தென்னிந்திய மொழியில் தனக்கென ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி வைத்திருக்கும் நித்யாமேனன் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமாகி இப்போது கதாநாயகியாகவும் கலக்கிக் கொண்டிருக்கிறார். தமிழில் ஒருசில திரைப்படங்களில் நடித்தாலும் ஒவ்வொரு திரைப்படத்திலும் மக்களின் மனதில் பதியும் வகையிலேயே நடித்து வருகிறார்.

இவருடைய நடிப்பிற்கு திருசிற்றம்பலம் திரைப்படம் பெரிய அளவில் இவருக்கு பாராட்டை வாங்கிக் கொடுத்தது. இந்த திரைப்படத்திற்கு பிறகு இவர் மீது அதிக எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு இருக்கிறது. இந்த நிலையில் சமீபத்தில் தனுஷ் உடன் “இட்லி கடை” திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அதேபோல நடிகர் விஜய் சேதுபதியுடன் “தலைவன் தலைவி” திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இந்த திரைப்படத்திற்கான ட்ரைலர் வெளியாகி பட்டித்தொட்டி எல்லாம் ட்ரண்ட் ஆகிக்கொண்டிருக்கிறது.

instagram பக்கத்தில் “தலைவன் தலைவி” திரைப்படத்தின் டிரைலரில் விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் பேசிய டயலாக் இதுதான் பலர் ரீல்ஸ் வீடியோக்கள் வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள். தலைவன் தலைவி ட்ரெய்லர் வெளியான பிறகு பல ஜோடிகள் நித்யா மேனன் மற்றும் விஜய் சேதுபதியை ரீ கிரியேட் செய்து கொண்டிருக்கிறார்கள்.

இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் நித்யா மேனன் பேசும்போது சினிமா உலகில் பெண்கள் அனுபவிக்கும் பிரச்சனைகள் மற்றும் தவறான பார்வை, சமூக எண்ணங்கள் குறித்து பகிர்ந்து இருக்கிறார். நித்யா மேனன் பேசும்போது, “ஒரு சாதாரண பெண்ணிடம் நடந்து கொள்வது போல நடிகையிடம் யாரும் நடந்து கொள்வதே இல்லை. நாங்கள் நடிக்கிறோம் என்பதாலே எல்லோரும் ஈஸியாக தொடலாம் என்று நினைக்கிறார்கள்” என்று வருத்தம் தெரிவித்திருந்தார்.

மேலும் நித்யா மேனன் பேசும்போது “ஒரு பங்க்ஷனுக்கு போனால் ரசிகர்கள் எல்லோரும் கைய குடுங்க என்று கேட்கிறார்கள். இந்த கேள்வியை சாதாரண பெண்ணிடம் யாரும் கேட்க மாட்டாங்க. ஆனால் நடிகை என்றால் தொடலாம் என்ற எண்ணம் தான் இருக்கிறது. பொதுவாக எனக்கு தெரியாத யாரையும் தொட்டு பேசுவது பிடிக்காது. அதனால் கூட அடுத்தவர்கள் என்னிடம் கை கேட்கும் போது நான் மறுத்திருக்கிறேன். ஆனால் அது பெரிய பிரச்சனையாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். எனக்கு யாருக்கு கை கொடுக்க வேண்டும் என்று தோன்றுகிறதோ அவர்களிடம் தானே நான் கை கொடுக்க முடியும்? என்று அந்த பேட்டியில் நித்யா மேனன் பேசி இருந்தார்.

இந்த பேட்டி இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த சில மாதங்களுக்கும் முன்பு ஒரு நிகழ்ச்சியில் நித்யா மேனன் கலந்து கொண்ட போது அங்கு இருந்த ரசிகர் ஒருவர் நித்யா மேனனிடம் கைகடுக்க சொல்லி கை கொடுப்பார், அதற்கு நித்யா மேனன் கை எடுத்து கும்பிட்டு விட்டு எனக்கு ஜலதோஷம் என்று சொல்லிவிட்டு போய்விடுவார். பிறகு மேடையில் இருந்த நடிகருக்கு கைகொடுத்து அவரை கட்டிப்பிடித்து இருந்தார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி இருந்தது. அதற்கு விளக்கம் கொடுக்கும் வகையில் நித்யா மேனன் இப்போது பேசி இருக்கிறார்.