தக்லைஃப் சினிமாவை நானும் பார்க்க ஆர்வமாக இருந்தேன். ஆனால் இப்போது படம் வெளியாகாத நிலை உருவாக்கி உள்ளது. தமிழில் இருந்து தான் கன்னடம் பிறந்தது என்பதை எதனடிப்படையில் பேசினீர்கள். ராஜகோபாலாச்சாரி இதேபோன்று பேசி மன்னிப்பு கோரினார். ஆனால் நீங்கள் மன்னிப்பு கேட்கவில்லை. வணிக நோக்கத்துக்காக சினிமாவில் நடித்து, நீங்கள் செய்த தப்புக்கு போலீஸ் பாதுகாப்பு கொடுக்க வேண்டுமா? என்று கர்நாடகா உயர்நீதிமன்ற நீதிபதி நாகரத்னா கேள்வி எழுப்பினார்.
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடித்துள்ள திரைப்படம் தக் லைஃப். இந்த திரைப்படம் வரும் ஜூன் 5 ஆம் தேதி திரைக்கு வருகிறது. இந்த படத்தில் 38 ஆண்டுகள் கழித்து இயக்குநர் மணிரத்னம்-கமல் இணைந்துள்ளனர். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் கடந்த வாரம் சனிக்கிழமை நடந்தது. அதில் சிறப்பு விருந்தினராக கன்னட நடிகர் சிவராஜ் குமார் பங்கேற்றார்.
இந்த விழாவில் கமல்ஹாசன் பேசிகையில், ‛‛தமிழில் இருந்து பிறந்ததுதான் உங்கள் கன்னடம் பிறந்தது” என்று கூறினார். இது பெரும் சர்ச்சையை கிளப்பியது. கன்னடம் தமிழில் இருந்து பிறக்கவில்லை. அது தனித்து இயங்க கூடியது என்று கன்னட அமைப்பினர், கர்நாடகா அரசியல்வாதிகள் கூறினர். மேலும் கமல்ஹாசன் தனது பேச்சுக்கு மன்னிப்பு கோர வேண்டும் என்று தெரிவித்தனர்.
ஆனால் கமல்ஹாசன் மன்னிப்பு கோரவில்லை. கமல்ஹாசன் மன்னிப்பு கேட்கும் வரை தக் லைஃப் திரைப்படத்தை கர்நாடகாவில் வெளியிட விட மாட்டோம் என்று கர்நாடகா திரைப்பட வர்த்தக சபை அறிவித்துள்ளது. மீறி படத்தை வெளியிட்டால் தியேட்டர்களை கொளுத்துவோம் என்று சில அமைப்பினர் மிரட்டல் விடுத்துள்ளனர். இதனால் கர்நாடகாவில் தக்லைஃப் திரைப்படம் வெளியாவதில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் தான் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தது. அதில் வரும் 5ஆம் தேதி வெளியாகும் தக் லைஃப் படத்தை தடுக்கக் கூடாது என கர்நாடகா அரசு, போலீஸ் துறை மற்றும் கன்னட சினிமா வர்த்தக சபைக்கு உத்தரவிட வேண்டும். தியேட்டர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கூறியிருந்தன.
இந்த மனு இன்று கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. நீதிபதி நாகரத்னா கமல்ஹாசன் தரப்புக்கு சரமாரி கேள்வி எழுப்பினார். தமிழில் இருந்து கன்னடம் பிறந்தது என எதன் அடிப்படையில் பேசினீர்கள். அதற்கான ஆதாரம் உங்களிடம் இருக்கிறதா? நீங்கள் என்ன வரலாற்று ஆய்வாளரா இல்லை மொழியியல் வல்லுநரா?. உங்கள் (கமல்) பேச்சால் சமூக நல்லிணக்கத்திற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதற்கு முன்பு ராஜகோபாலாச்சாரி இதேபோன்று பேசினார். அதன்பிறகு அவர் மன்னிப்பு கேட்டார். ஆனால் கமல்ஹாசன் மன்னிப்பு கேட்கவில்லை. வணிக நேக்கத்துக்காக அவர் சினிமாவில் நடிக்கிறார். அவர் செய்த தப்புக்கு போலீஸ் பாதுகாப்பு கொடுக்க வேண்டுமா? அவரது பேச்சால் சிவராஜ்குமாருக்கு பிரச்சனையை எதிர்கொண்டு வருகிறார்.
நீங்கள் உங்கள் பேச்சை மறுக்கவில்லை. ஒப்புக்கொண்டு உள்ளீர்கள். மன்னிப்பு கேட்கவும் தயாராக இல்லை. நானும் கூட தாக்லைப் படத்தை பார்க்க ஆவர்மாக இருந்தேன். ஆனால் எல்லா விவாதங்களில் இருந்து வாய்ப்பு என்பது இல்லை. இதனால் உங்களின் நிலைப்பாடு பற்றி மதியம் 2.30 மணிக்கு கூறுங்கள்” என்று கூறி வழக்கு விசாரணையை இன்று மதியம் 2.30 மணிக்கு ஒத்திவைத்தார்.