எனக்கு உறுதுணையாக இருந்த தமிழகத்துக்கு நன்றி: கமல்ஹாசன்!

“எனக்கு உறுதுணையாக இருந்த தமிழக்த்துக்கே நன்றி சொல்ல வேண்டும். நான் மேடையில் பேசும்போது, ‘உயிரே.. உறவே.. தமிழே..’ என்று சொன்னதற்கான அர்த்தத்தை முழுமையாக உணர்கிறேன்” என நடிகர் கமல்ஹாசன் நெகிழ்ச்சியுடன் பேசினார்.

மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிலம்பரசன் மற்றும் த்ரிஷா நடித்துள்ள ‘தக் லைஃப்’ திரைப்படம் நாளை (மே 5) வெளியாகவுள்ளது. இந்த நிலையில், ‘தக் லைஃப்’ படக்குழுவினர் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தனர். இந்தச் சந்திப்பின்போது பேசிய கமல்ஹாசன் கூறியதாவது:-

இந்தப் படத்தில் எங்களுக்கு கிடைத்த படை என்பது வீரர்கள் நிறைந்த படை. இந்தப் படம் உலக தரத்துக்கு இருக்கும். நமது தொழில்நுட்ப கலைஞர்கள் உலகமே பாராட்டும் அளவுக்கு வேலை செய்திருக்கிறார்கள்.
உதாரணமாக, மணிரத்னத்தை சொல்லலாம். சர்வதேச தரத்தில் ‘தக் லைஃப்’ படம் உருவாகி இருக்கிறது. ‘நாயகன்’ படத்தின்போது நான் பார்த்த இளைஞர் மணிரத்னம் இன்று ஒரு சினிமா ஞானியாக உள்ளார். இந்தப் படத்தில் சிறந்த டெக்‌னிஷியன்கள் பதற்றம் இல்லாமல் பணியாற்றி இருக்கிறார்கள். எல்லா உயரங்களையும் தாண்டும் லாவகம் இவர்களுக்கு உள்ளது.

ரவி கே.சந்திரன் அமெரிக்காவில் படம் எடுக்கும் அளவுக்கு திறமை உள்ளவர். ஒளிப்பதிவாளர் ரவி கே.சந்திரன் 20 ஆண்டுகளுக்கு முன்பே ‘மருதநாயகம்’ படத்தில் பணியாற்றி இருக்க வேண்டும். அதனை பாதியிலேயே கைவிட்டுவிட்டோம் என்ற வருத்தம் உள்ளது. இந்தப் படத்தில் இன்னும் சிறப்பாக கூடுதல் அனுபவத்துடன் வந்து பணியாற்றியுள்ளார்.

இப்படம் வியாபார ரீதியாக வெற்றி பெற வேண்டும். அதனைவிட என் சினிமா வெற்றி பெற வேண்டும் என்பதே எங்களின் எண்ணம். இந்தப் படத்துக்கு ஆரோக்கியமான சூழல் அமைந்துள்ளது. ராஜ்கமல் நிறுவனத்துக்கு பின் உள்ள இன்டர்நேஷனல் என்ற வார்த்தைக்கு முழு அர்த்தத்தை மணிரத்னம் அளித்திருக்கிறார். சின்னச் சின்ன கதாபாத்திரத்தில் நடித்தவர்கள் கூட மிகச் சிறப்பாக நடித்துள்ளார்கள். வையாபுரி போன்றவர்கள் சிறப்பாக நடித்துள்ளார்கள். இப்படத்தில் பணிபுரிந்தவர்களின் திறமையை பற்றி பேசுவதற்கு இன்னொரு விழா நிச்சயம் நடக்கும் என்று நம்புகிறேன்.

முக்கியமாக, எனக்கு உறுதுணையாக இருந்த தமிழகத்துக்கே நன்றி சொல்ல வேண்டும். நான் மேடையில் பேசும்போது, ‘உயிரே..உறவே.. தமிழே..’ என்று சொன்னதற்கான அர்த்தத்தையும் முழுமையாக உணர்கிறேன்” என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, கர்நாடகாவில் ‘தக் லைஃப்’ படத்துக்கான தடை தொடர்பாக நிருபர்கள் கேள்வி எழுப்பியபோது, “இது உங்களுக்கு நன்றி சொல்லவும், எங்களின் குதூகலத்தை வெளிப்படுத்தவும் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வு. இன்னும் பேச வேண்டியது நிறைய உள்ளது. கண்டிப்பாக அதற்கான நேரத்தை ஒதுக்கித் தர வேண்டியது எனது கடமை. தமிழனாக.” என்றார் கமல்ஹாசன்.