ஹேமா கமிட்டி அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு 5 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருப்பது குறித்து நடிகை பார்வதி திருவோத்து கேரள அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.
மலையாள நடிகை ஒருவர், கடந்த 2017-ம் வருடம் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானதைத் தொடர்ந்து, மலையாள சினிமா துறையில் பணிபுரியும் பெண்களுக்காக ‘விமன் இன் சினிமா கலெக்டிவ்’ (WCC) என்ற அமைப்புத் தொடங்கப்பட்டது. இந்த அமைப்பின் தொடர் கோரிக்கையால் மலையாள திரையுலகில் பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் பிரச்சினைகள் குறித்து ஆய்வு செய்ய ஹேமா கமிட்டி அமைக்கப்பட்டது.
இந்த நிலையில் ஹேமா கமிட்டி அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு 5 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருப்பது குறித்து நடிகை பார்வதி திருவோத்து கேரள அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.
தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் கேரள முதல்வர் பினராயி விஜயனை நேரடியாக குறிப்பிட்டு கேள்வி எழுப்பியுள்ளார் பார்வதி. அதில், “இப்போது ஹேமா கமிட்டி அமைக்கப்பட்டதற்கான உண்மையான காரணத்தில் நாம் கவனம் செலுத்தலாமா? சினிமா துறையில் ஒழுங்குமுறைகளை உருவாக்க உதவும் கொள்கைகளை எப்போது அமல்படுத்துவது? அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு ஐந்தரை ஆண்டுகள் மட்டுமே ஆகிறது, அவசரம் ஒன்றும் தேவையில்லை” என்று பார்வதி காட்டமாக தெரிவித்துள்ளார்.
ஹேமா கமிட்டி தொடர்புடைய வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு புலனாய்வுக் குழு அவற்றை முடிக்கத் தயாராகி வருவதாக தகவல்கள் வெளியானதைத் தொடர்ந்து பார்வதி இதனை பதிவிட்டுள்ளார்.