லைகா நிறுவனத்துக்கு 21 கோடியே 29 லட்சம் ரூபாயை 30 சதவீத வட்டியுடன் வழங்க வேண்டும் என நடிகர் விஷால் தரப்புக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடிகர் விஷால், தனது விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்துக்காக சினிமா பைனான்சியர் அன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்திடம் பெற்ற 21 கோடியே 29 லட்சம் ரூபாய் கடனை, லைகா நிறுவனம் ஏற்றுக் கொண்டு செலுத்தியது. அந்த தொகை முழுவதும் திருப்பி செலுத்தும் வரை, விஷால் பட நிறுவனத்தின் அனைத்து படங்களின் உரிமைகளும் லைகா நிறுவனத்துக்கு வழங்க வேண்டுமென ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
இந்த ஒப்பந்தத்தை மீறி, படங்களை வெளியிட்டதாகக் கூறி, பணத்தை திருப்பித் தர உத்தரவிடக் கோரி விஷாலுக்கு எதிராக லைகா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், 15 கோடி ரூபாயை டெபாசிட் செய்ய உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை இரு நீதிபதிகள் அமர்வு உறுதி செய்தது. இந்த வழக்கை நீதிபதி பி.டி.ஆஷா விசாரித்தார். இந்த வழக்கில் தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில், இந்த வழக்கில் நீதிபதி பி.டி.ஆஷா இன்று (ஜூன் 5) தீர்ப்பளித்தார். லைகா நிறுவனத்துக்கு வழங்க வேண்டிய 21 கோடியே 29 லட்சம் ரூபாயை 30 சதவீத வட்டியுடன் விஷால் தரப்பு வழங்க வேண்டும். வழக்குச் செலவு தொகையையும் லைகா நிறுவனத்துக்கு வழங்க விஷால் தரப்பு வழங்க வேண்டும், என்று அந்த தீர்ப்பில் நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.