நடிகர் விஷால், நடிகை சாய் தன்ஷிகா திருமண தேதியை அறிவித்ததில் இருந்தே, திருமணத்திற்கான வேலையை தொடங்கிவிட்டார்கள். அண்மையில் இவர்கள் இருவரும் திரையுலக நண்பர்களுக்கு பத்திரிகை வைக்கும் பணியை தொடங்கிவிட்டார்கள். இந்த நேரத்தில் நடிகை சாய் தன்ஷிகா அந்தமான் செல்ல இருக்கிறார்.
தயாரிப்பாளரின் மகனான விஷால், ஆக்ஷன் கிங் அர்ஜூனிடம் உதவி இயக்குநராக வேதம், ஏழுமலை ஆகிய படத்தில் பணியாற்றினார். இதைத்தொடர்ந்து, செல்லமே திரைப்படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார். இந்த படத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, அதிரடியான ஆக்ஷன் திரைப்படத்தில் நடித்து பெயர் எடுத்தார். சண்டைக்கோழி, திமிரு, தாமிரபாணி, மலைக்கோட்டை, தோரணை என இவர் நடித்த அனைத்துப்படங்களும் பிளாக் பஸ்டர் ஹிட்டடித்தது. இவர், மத கஜ ராஜா திரைப்படத்தில் நடித்த போது, சரத்குமாரின் மகளான நடிகை வரலட்சுமியை காதலித்து வந்ததாக கூறப்பட்டது. இவர்கள் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ளுவார்கள் என ஒட்டுமொத்த திரையுலகமே எதிர்பார்த்த நிலையில், சரத்குமார் திருமணத்திற்கு சம்மதிக்காத காரணத்தால், நடிகர் விஷாலுக்கு, அனிஷா ரெட்டி என்பவருடன் நிச்சயதார்த்தம் நடந்தது. ஆனால், திருமணம் நடக்காமல் நிச்சயத்தோடு நின்று போனது. இதனால், விரக்தி அடைந்த விஷால், நடிப்பில் தனது முழு கவனத்தையும் செலுத்தினார். அதன் பின் அவர் நடித்த மருது, கதகளி, துப்பறிவாளன் போன்ற படங்கள் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றன.
அதன் பின்னர் பலரும் திருமணம் எப்போது, எப்போது என கேட்டுக்கொண்டே இருந்ததால், நடிகர் சங்க கட்டிடம் கட்டி முடிந்தவுடன் திருமணம் என அறிவித்து இருந்தார். கட்டிடம் கட்ட ஆரம்பித்து கிட்டத்தட்ட 9 ஆண்டுகளுக்கு மேல் ஆகி, தற்போது கட்டிடம் முடியும் தருவாயில் இருக்கிறது. அந்த நேரத்தில், தனது நீண்ட நாள் தோழியான சாய் தன்ஷிகாவை காதலிக்கும் விஷயத்தை ‘யோகிடா’ பட நிகழ்ச்சியில் கூறினார். நடிகர் விஷால், சாய் தன்சிகா திருமணம், விஷாலின் பிறந்த நாளான ஆகஸ்ட் 29ம் தேதி நடக்க உள்ளது. இதற்காக திருமண பத்திரிக்கை கொடுக்கும் பணியை இப்போதே இருவரும் தொடங்கிவிட்டார்கள்.
இந்நிலையில், சாய் தன்ஷிகா கல்லுாரி மாணவர் அசோக்குமார் இயக்கும் பெயரிடப்படாத படம் ஒன்றில் கமிட்டாகி உள்ளார். அந்த படத்தின் படப்பிடிப்புக்காக அந்தமான் செல்ல இருக்கிறார். ஒருவரின் ஆழ்மனதில் இருக்கும் விஷயத்தை தெரிந்து கொள்வது இத்திரைப்படத்தின் கதையா இருக்கும் என்று சொல்லப்படுகிறது. இதில், தன்ஷிகாவுடன் கீதா கைலாசம், சிம்ரன் குப்தா உட்பட பலர் நடிக்க உள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு அந்தமான் மற்றும் அதை சுற்றியுள்ள தீவுகளில் ஒரே கட்டமாக படப்பிடிப்பு நடக்க இருக்கிறது. படத்தை முடித்துவிட்டால், அடுத்து திருமண வேலையில் கவனம் செலுத்துவதற்காக இப்போதே படப்பிடிப்பை விரைவு படுத்தி உள்ளார். மேலும், திருமணத்திற்கு பிறகு தொடர்ந்து நடிப்பேன் என தன்ஷிகா நேற்று நடந்த நிகழ்ச்சியில் கூறியுள்ளார். நடிப்பதை தவிர எனக்கு வேறு வேலை தெரியாது, இதற்காக நான் 16 வருடம் உழைத்து இருக்கிறேன், சினிமா என்பது என்னுடைய பேஷன், இதனால், நான் தொடர்ந்து நடிப்பேன் என தன்ஷிகா கூறியிருந்தார்.