தனுஷ் நடிப்பில் வரும் ஜூன் 20 ஆம் தேதி வெளியாக உள்ள திரைப்படம் குபேரா. இந்தப் படத்தின் புரொமோஷன் பணிகளில் தனுஷ் படக்குழுவினருடன் சென்று வருகிறார். இந்த நிலையில் நேற்று குபேரா படத்தின் பாடல் வெளியீட்டு நிகழ்ச்சி மும்பையில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில், ஏராளமான ரசிகர்கள் கலந்து கொண்ட நிலையில், பல்வேறு மீடியாக்களும் செய்தி சேகரிக்க வந்திருந்தனர். அந்த நிகழ்ச்சியில், தனுஷ் பேச ஆரம்பிக்கையில், எல்லோருக்கும் வணக்கம் என தமிழில் பேசத் தொடங்கினார். பின், அவர், “எல்லோருக்கும் வணக்கம். எனக்கு உங்கள எல்லாம் பாத்ததுல ரொம்ப சந்தோஷம். எனக்காக இங்க வந்திருக்கீங்க. எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியல” என்றார்.
அப்போது குறுக்கிட்ட பத்திரிகையாளர் ஒருவர் தனுஷை ஹிந்தியில் பேசுமாறு கூறினார். அப்போது எனக்கு ஹிந்தி, பேசத் தெரியாது. நான் ஆங்கிலம் கூட கொஞ்சம் கொஞ்சம் தான் பேசுவேன் என சிரித்துக் கொண்டே பேசினார். இது ஹிந்தி பேசும் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. தனுஷின் இந்த நடவடிக்கைக்கு சிலர் ஆதரவாகவும் எதிராகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
தொடர்ந்து ஆங்கிலத்தில் பேசிய தனுஷ், இந்தப் படத்தில் தான் பிச்சைக்காரனாக நடித்துள்ளதாகவும், இதற்காக நிறைய ஆராய்ச்சிகள், ஹோம் ஒர்க் எல்லாம் செய்ததாக பொய் எல்லாம் சொல்ல மாட்டேன். நான் அப்படியே செட்டிற்கு வருவேன். சேகர் சார் என்ன சொன்னாரோ அதை செய்துவிடுவேன். அவர் ரொம்ப அறிவாளி. அவர் நான் எப்படி நடிக்க வேண்டும், எப்படி பேச வேண்டும் என்றெல்லாம் சொல்லி தந்தார். இது ரொம்ப வித்யாசமான படம். இந்தப் படத்துக்காக வந்த எல்லா சேலஞ்களையும் மகிழ்ச்சியாகவே ஏற்றுக் கொண்டேன் என்றார்.
தனுஷ், தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குநர், பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் என பலமுகங்களைக் கொண்டிருக்கிறார். இவர் ரசிகர்கள் மத்தியில் முன்னணி ஹீரோவாக வலம் வருகிறார். அதே சமயத்தில் இவர், ராஞ்சனா (தமிழில் அம்பிகாபதி), அட்ராங்கி ரே (தமிழில் கலாட்டா கல்யாணம்) எனும் இரு படத்தில் நடித்துள்ளார். அத்துடன் தற்போது தேர் இஷ்க் மெயின் எனும் புதிய ஹிந்தி படத்திலும் நடித்து வருகிறார். இந்த சூழலில் அவர் இந்தி தெரியாது எனக் கூறியது பலரிடத்திலும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதே நிகழ்ச்சியில் முன்னதாக பேசிய குபேரா படத்தின் நாயகி ராஷ்மிகா ஹிந்தியில் பேசத் தொடங்கினார். அப்போது ரசிகர்கள் எல்லாம் தமிழில் பேச வற்புறுத்தியபோது, இங்குள்ள ஹிந்தி மீடியாவிற்கு தமிழ் தெரியாது எனக் கூறிவிட்டு, ஆங்கிலத்தில் பேசத் தொடங்கினார். இப்படி, ஒரே நிகழ்ச்சியில், நடிகரும், நடிகையும் மொழியை வைத்து செய்த சம்பவம் தான் தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது.