அகமதாபாத் விமான விபத்து: குஷ்பு இரங்கல்!

நாட்டையே உலுக்கியுள்ள சம்பவமாக மாறியுள்ளது அகமதாபாத்தில் நடைபெற்ற ஏர் இந்தியா விமான விபத்து. அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து விமானம் புறப்பட்ட ஏர் இந்தியா நிறுவனத்தின் போயிங் 787 ரக விமானம் விபத்துக்குள்ளானது மொத்த நாட்டையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக திரைத்துறையைச் சேர்ந்தவர்கள் தங்களது வருத்தத்தை பகிர்ந்து வருகிறார்கள்.

இன்று அதாவது ஜூன் 12ஆம் தேதி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து 242 பயணிகளுடன் லண்டன் நோக்கி புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், ஓடுதளத்தில் இருந்து புறப்பட்ட 3 நிமிடத்திற்கு உள்ளாகவே விபத்திற்குள்ளாகியுள்ளது. இந்த விபத்து தொடர்பான வீடியோக்களும் புகைப்படங்களும் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. மீட்புப் பணிகள் வேகமாக நடைபெற்று வந்தாலும், அடுத்தடுத்து வரும் தகவல்கள் மக்களை மேலும் கவலைக்கு ஆளாக்கி வருகிறது. அதாவது விமானம் விபத்துக்குள்ளான இடம் என்பது விமான நிலையத்திற்கு அருகில் உள்ள மருத்துவக் கல்லூரி மாணவர்கள் விடுதி. விமானம் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் விடுதியின் மீது விழுந்துள்ளது. இதனால் விமானத்தில் பயணித்தவர்கள் மட்டுமல்லாமல், விடுதியில் தங்கியிருந்த சுமார் 50 முதல் 60 மாணவர்கள் வரை இந்த விபத்தினால் பாதிக்கப்பட்டு இருக்க அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் விமானத்தில் பயணித்தவர்கள் மற்றும் விடுதியில் இருந்தவர்கள் என சுமார் 300 பேரின் நிலை என்ன எனற கேள்விக்கு இதுவரை விடை தெரியவில்லை.

இந்நிலையில் நடிகை குஷ்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வேதனையுடன் பகிர்ந்துள்ள விஷயம் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. அதாவது, “அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு ஊழியர்கள் மற்றும் பயணிகள் என மொத்தம் 242 பேருடன் சென்று கொண்டிருந்த விமானம் விபத்துக்குள்ளானது வேதனை அளிக்கிறது. வாழ்க்கை எவ்வளவு பலவீனமாது மற்றும் கணிக்க முடியாதது. இந்த விபத்தில் காயங்களுடன் உயிர் பிழைத்தவர்கள் விரைவில் மீண்டு வர பிரார்த்திக்கிறேன். அதே நேரத்தில் இந்த விபத்தின் மூலம் தங்களின் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு எனது இரங்கல்கள்” என பதிவிட்டுள்ளார்.