“நானே சீக்கிரமாக சினிமாவை விட்டுப் போய்விட வேண்டும் என நினைக்கிறேன். இப்போது நான் சினிமாவில் மகிழ்ச்சியாக இல்லை” என்று இயக்குநர் மிஷ்கின் கூறினார்.
ஜியோ ஹாட்ஸ்டார், ஜிகேஎஸ் புரொடக்ஷன் மற்றும் செவன் சீஸ் & செவன் ஹில்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘பறந்து போ’. ஜூலை 4-ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தை ராம் இயக்கி இருக்கிறார். இதில் சிவா, கிரேஸ் ஆண்டனி, மாஸ்டர் மிதுன் ரியான், அஞ்சலி, அஜு வர்கீஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இதன் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் இயக்குநர் மிஷ்கின், சித்தார்த் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக் கொண்டார்கள். இந்த விழாவில் மிஷ்கின் பேசியதாவது:-
‘பிசாசு 2’ மற்றும் ‘ட்ரெயின்’ படங்களுக்கு பின் மிஷ்கின் முகவரியே இல்லாமல் போய்விடுவார் என்று ஒருவர் சொல்லியிருந்தார். அவரிடம் ஒரு விஷயத்தைச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். நானே சீக்கிரமாக சினிமாவை விட்டுப் போய்விட வேண்டும் என நினைக்கிறேன். இப்போது நான் சினிமாவில் மகிழ்ச்சியாக இல்லை. அந்த காலமெல்லாம் போய்விட்டது. இங்கு போட்டி அதிகமாகிவிட்டது. வியாபாரமும் ரொம்பவே அலைக்கழிக்கிறது. நான் சினிமாவில் ரத்தம் சொட்டச் சொட்ட இருக்கிறேன்.
சமீபமாக பட விழாக்களில் கலந்து கொள்ளுமாறு எனக்கு அழைப்பு விடுத்து ஐந்து முதல் ஆறு ஃபோன் கால்கள் வருகிறது. தயவு செய்து என்னை அழைக்காதீர்கள். அப்படி அழைத்தால் ஒரு விழாவுக்கு ரூ.5 லட்சம் கொடுங்கள். அதை வங்கியில் போட்டுவைத்து, மகளின் படிப்பு செலவுக்கு உபயோகித்துக் கொள்வேன்.
இப்போது பலரும் விமர்சகர்கள் குறித்து பேசுகிறார்கள். ஒரு படம் நன்றாக இருந்தால் ‘நன்றாக உள்ளது’ எனவும், நன்றாக இல்லை என்றால் அப்படத்தை ‘நன்றாக இல்லை’ என்று தான் சொல்ல வேண்டும். அனைவருக்குமே அந்த உரிமை இருக்கிறது. நன்றாக இருக்கிறது என்பதை ஏற்றுக் கொண்டு பெருமைப்படும் போது, நன்றாக இல்லை என்று சொல்லும் போது மட்டும் கோப்படுகிறோம். அதேபோல் பலரும் மேடைகளில் மது குடித்துவிட்டு வந்து பேசுவதாக சொல்கிறார்கள். நான் இரவில் மட்டுமே மது குடிப்பேன். விழாக்களுக்கு செல்லும் போது குடித்துவிட்டு வருவதில்லை. இவ்வாறு மிஷ்கின் பேசினார்.