இஸ்ரேல் – ஈரான் இடையே நடைபெற்று வரும் போர் பதற்றம் குறித்து கவிஞர் வைரமுத்து கவிதை ஒன்றை எக்ஸ் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
ஈரான் நாட்டின் அணுசக்தி நிலையங்களை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் மீண்டும் தாக்குதல்களை நடத்தியுள்ளது. முன்னதாக நேற்று வெள்ளிக்கிழமை ஈரான் தலைநகர் தெஹ்ரான் மீது வான்வழி தாக்குதலை தொடுத்தது இஸ்ரேல். இதில் தெஹ்ரான் நகரில் உள்ள குடியிருப்புகள் உட்பட பல்வேறு கட்டிடங்கள் சிதிலமடைந்தன. இந்த தாக்குதலை அடுத்து ஈரான் வான்வெளி மூடப்பட்டது. இதை ஈரான் நாட்டின் அரசு ஊடக நிறுவனமான ஐஆர்என்ஏ உறுதி செய்தது. மேலும் அந்நாட்டின் ராணுவ தளங்கள் மற்றும் அணுசக்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் ராணுவம் கூறியது.
இந்த நிலையில், தற்போது இரண்டாவது முறையாக மீண்டும் ஈரான் கட்டமைப்புகள் மீது புதிய வான்வழி தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. மேற்கு தெஹ்ரான் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், கவிஞர் வைரமுத்து இஸ்ரேல் – ஈரான் இடையே நடைபெற்று வரும் போர் பதற்றம் குறித்து தனது எக்ஸ் தள பதிவில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். வைரமுத்து வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது:-
“இதோ
இன்னுமொரு யுத்தம்
தாங்குமா?
மண்டை உடைந்துவிடும்
மண்ணுருண்டை
இஸ்ரேல் காஸா
சாவுச் சத்தம் அடங்குவதற்குள்
ரஷ்யா உக்ரைன்
ரத்தச் சகதி காய்வதற்குள்
இஸ்ரேல் ஈரான்
தொடங்கிவிட்டது
சொல் பேச்சுக் கேட்காத
இரு நாடுகளால்
உலகத்தைச் சூழ்ந்திருக்கின்றன
அச்சத்தின் கடலலைகள்
அப்பாவி மனித எலும்புகளை
நொறுக்கித் தின்னுகின்றன
ஆயுதப் பற்கள்
போர்ச் சங்கிலி என்பது
உலகைப் பிணைத்திருக்கிறது
இஸ்ரேல் யுத்தம்
மதுரை மல்லிகையில் புகையடிக்கிறது
ஈரான் யுத்தம்
ஈரோட்டின் மஞ்சளைக்
கரியாக்குகிறது
மில்லி மீட்டர்களில்
ஏறும் பொருளாதாரம்
மீட்டர் மீட்டராய்ச் சரிகிறது
அணு ஆயுதங்களை
மொத்தத்தில் அழிப்பதற்கு
உலக நாடுகள் ஒரே மையில்
கையொப்பமிடவேண்டும்
போர் வேண்டாம்
புன்னகை வேண்டும்
யுத்தமில்லாத பூமி – ஒரு
சத்தமில்லாமல் வேண்டும்”.
இவ்வாறு கவிஞர் வைரமுத்து பதிவிட்டுள்ளார்.