நடிகை அருணா வீட்டில் அமலாக்கத்துறை சோதனை!

சென்னையில் ‘கல்லுக்குள் ஈரம்’ நடிகை அருணா வீட்டில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இயக்குநர் பாரதிராஜாவின் கல்லுக்குள் ஈரம் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான நடிகை அருணா, கல்லுக்குள் ஈரம், மகரந்தம், சிவப்பு மல்லி, நீதி பிழைத்தது, பெண்ணின் வாழ்க்கை, நாடோடி ராஜா, ஆனந்த ராகம், சட்டம் சிரிக்கிறது, முதல் மரியாதை, கரிமேடு கருவாயன் போன்ற பல திரைப்படங்களில் நடித்து தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் அருணா.

சென்னை கிழக்கு கடற்கரை சாலை நீலாங்கரை கபாலீஸ்வரர் நகர் கேசினோ ட்ரை பகுதியில் கணவர் தொழிலதிபர் மன்மோகன் குப்தாவுடன் வசித்து வருகின்றார். மன்மோகன் குப்தா பிரபல (ஆர்க்கிடெக்சர்) வீடு, பங்களாக்களில் உள்கட்டமைப்பு அலங்காரப் பணிகளை மேற்கொள்ளும் நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

இந்நிலையில், தொழிலதிபர் மன்மோகன் குப்தா மீது சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பான புகாரில் நீலாங்கரை கபாலீஸ்வரர் நகரில் உள்ள அவரது சொகுசு வீடு, அலுவலகங்களில் மூன்று கார்களில் வந்த பத்துக்கும் மேற்பட்ட அமலாக்கத் துறை அதிகாரிகள் இன்று புதன்கிழமை காலை 7 மணி முதல் நீலாங்கரையில் உள்ள வீடு, அலுவலகங்களில் சோதனையில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.

மன்மோகன் குப்தா நடத்தி வரும் நிறுவனத்தில் சட்டவிரோத பண பரிமாற்றம் நடைபெற்றதாக கிடைத்த சில புகார்களின் அடிப்படையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், முழுமையான சோதனைக்குப் பிறகு தொழிலதிபர் மன்மோகன் குப்தா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதா?, முக்கிய ஆவணங்கள் ஏதாவது சிக்கி உள்ளதா?, பணம் ஏதாவது கைப்பற்றப்பட்டுள்ளதா?, புகாரில் முகாந்திரம் இருக்கிறதா?, அல்லது வேறு என்ன விவகாரம் தொடர்பாக அதிகாரிகள் சோதனை நடத்துகிறார் என்பது குறித்து தெரியவரும் எனவும் அமலாக்கதுறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த சோதனையில் இவர்கள் இல்லத்தில் ஏதாவது ஆவணங்கள் சிக்கினால் அதன் அடிப்படையில் இவர்களுக்கு சொந்தமாக வேறு ஏதாவது அலுவலகங்கள் வீடுகள் இருந்தால் அங்கேயும் சோதனைகள் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது சென்னையில் மட்டுமே அமலாக்கதுறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

நடிகை அருணாவின் வீட்டில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்துவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.