பணம் சம்பாதிக்க வேண்டும். காசு ஒன்றுதான் என்னுடைய கோலாக இருந்தது. மாதம் ஒரு ஒரு லட்ச ரூபாய் சம்பாதித்தால் போதும் என்று நினைத்தேன் என்று விஜய் சேதுபதி கூறியுள்ளார்.
இயக்குநர் பாண்டிராஜ் விஜய் சேதுபதி நடிப்பில் ‘தலைவன் தலைவி’ என்ற படத்தை இயக்கியுள்ளார். நித்யா மேனன் நாயகியாக நடித்துள்ள இந்த படத்தில், தீபா, யோகி பாபு, மைனா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையைமத்துள்ள இந்த படத்தில் இடம் பெற்றுள்ள ‘என்னடி சித்திரமே பாடல்’ இணையத்தில் டிரெண்டாகி உள்ளது. சத்யஜோதி நிறுவனம் தயாரித்துள்ள இந்த படம், வரும் ஜூலை 25-ந் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, சென்னையில் பிரம்மாண்டமாக நடத்தி முடிக்கப்பட்ட நிலையில், படக்குழுவினர் அனைவரும் ‘தலைவன் தலைவி’ யூடியூப் ப்ரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகின்றனர். அந்த வகையில் விஜய் சேதுபதி யூடியூப் சேனலுக்கு மனம் திறந்து பல விஷயத்தை பகிர்ந்துள்ளார்.
கேள்வி: விஜய் குருநாத சேதுபதி காளிமுத்து எப்போது.. விஜய்சேதுபதி ஆனார்?
பதில்: புதுப்பேட்டை படத்தில் நான் நடித்த போது பெயரை எழுதிக் கொடுக்க சொன்னார்கள். அப்போது நான், விஜய் குருநாத சேதுபதி காளிமுத்து என என்னுடைய முழு பெயரை எழுதிக் கொடுத்தேன். அதை பார்த்துவிட்டு பெயர் பெரியதாக இருக்கிறது, சுருக்கி கொடு என்றார்கள். அப்போது தான், அது விஜய் சேதுபதியாக மாறியது.
கேள்வி: சினிமாவிற்கு வந்து வாய்ப்பு தேடி அலைந்த போது, சின்ன சின்ன வேடத்தில் நடித்த போது உங்களின் மனநிலை எப்படி இருந்தது?
பதில்: நான் சினிமாவிற்கு வந்த புதிதில் எனக்கு சினிமாவை பற்றி எதுவுமே தெரியாது. சினிமா பார்க்கும் பழக்கம் எனக்கு இல்லாததால் இயக்குனர் யார், அவர் என்ன செய்கிறார் என்று புரிந்து சொல்லும் ஆர்வம் தான் இருந்ததே தவிர, என்றாவது ஒருநாள் பெரிய நடிகராக வேண்டும் என்கிற எண்ணம் இல்லை. ஏதோ ஒரு குறிக்கோளோடு தான் சினிமாவிற்கு வந்தேன் என்பதெல்லாம் இல்லை. பணம் சம்பாதிக்க வேண்டும். காசு ஒன்றுதான் என்னுடைய கோலாக இருந்தது. மாதம் ஒரு ஒரு லட்ச ரூபாய் சம்பாதித்தால் போதும் என்று நினைத்தேன். அதற்கு ஏதாவது தெரிய வேண்டும் என்பதற்காக சினிமாவை பற்றி நன்றாக புரிந்து கொள்ள ஆரம்பித்தேன். பணம் சம்பாதிக்க வேண்டும் என்று நினைத்தற்கான காரணம் குடும்ப சூழ்நிலைதான். எப்பொழுதுமே குடும்பத்தில் பணம் பிரச்சனை இருந்து கொண்டே இருக்கும். கடன்காரர்கள் வீட்டில் வந்து பணத்தைக் கேட்பார்கள். ஒருவேளை சாப்பாட்டிற்கே வழியில்லாமல் இருந்த போது தான் எப்படியாவது சம்பாதிக்க வேண்டும் என்கின்ற எண்ணமே எனக்குள் வந்தது. டெலிபோன் பூத்தில் வேலை செய்து இருக்கிறேன், கார் சர்வேயர் எடுத்திருக்கிறேன் இப்படி பல வேலைகளை செய்து, எல்லாமே தோல்வி அடைந்த போது தான் சினிமாவிற்குள் வந்தேன். ஆனால் சினிமாவிலும் ஜெயிக்காமல் போய்விடுவோம் என்ற பயம் இருந்ததால், யூனியனிலும் கார்டு எடுத்து வைத்திருந்தேன். அப்போது தொலைக்காட்சி ஒன்றில் மலையாள படம் ஹிந்தி படங்களை எல்லாம் டப் செய்து போடுவார்கள். அதில் நான் டப்பிங் பேசி இருக்கிறேன். அதற்கு எனக்கு 360 ரூபாய் சம்பளம் கொடுத்தார்கள். மோகன்லால், முரளி அவர்களுக்கும் நான் டப்பிங் பேசி இருக்கிறேன். டப்பிங் பேசியது எனக்கு நல்ல அனுபவத்தை கொடுத்தது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
