எஸ்.பி.பி., இந்திய கலாச்சாரத்தின் உருவமாகத் திகழ்ந்தவர்: வெங்கையா நாயுடு

எஸ்.பி.பாலசுப்ரமணியம் இந்தியாவின் மாண்புகள் மற்றும் கலாச்சாரத்தின் உருவமாகவும் திகழ்ந்தார் என்று, குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு கூறினார்.

ஐதராபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மறைந்த பிரபல பின்னணி பாடகர் எஸ் பி பாலசுப்பிரமணியத்தின் வாழ்க்கை குறித்த புத்தகம் மற்றும் ஆவணப்படத்தைக் குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு வெளியிட்டார். நூலின் முதல் பிரதியைப் நடிகர் கமல்ஹாசன் பெற்றுக் கொண்டார். நிகழ்ச்சியில் வெங்கையா நாயுடு பேசியதாவது:-

எஸ்.பி.பாலசுப்ரமணியம் இந்தியாவின் மாண்புகள் மற்றும் கலாச்சாரத்தின் உருவமாகவும் திகழ்ந்தார். அவர் அனைவருக்கும், குறிப்பாக இளைய தலைமுறைக்கு எப்போதும் உந்துசக்தியாக இருப்பார். இந்திய கலாச்சாரத்தையும் பழக்க வழக்கங்களையும் எதிர்காலத் தலைமுறைகளுடன் இணைப்பதை உறுதி செய்வதும் வழிகாட்டுவதும்தான் அவருக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலி. புகழ்பெற்ற பின்னணிப் பாடகர் என்பதற்கும் அப்பால் அவர் இசையமைப்பாளராக, திரைப்பட இயக்குனராக, நடிகராகத் திகழ்ந்தவர். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தமது ஊக்கமளிக்கும் வார்த்தைகளாலும், அன்பாலும் ஆயிரக்கணக்கான இளைஞர்களை ஈர்த்தவர். எஸ்.பி.பி. மிக உயர்ந்த கலாச்சாரத்தையும் எளிமையையும் கொண்டவர். அவரது குணங்களால் அனைவராலும் மதிக்கப்பட்டவர். இவரது ஆளுமையைக் கட்டமைப்பதில் இவரின் தந்தை சாம்பமூர்த்தி மிக முக்கிய பங்கு வகித்தார். இந்தியாவை மென்மையான சக்தியாக முன்னிறுத்தியதில் இந்திய கலாச்சாரத்திற்கும், இசைக்கும், திரைப்படங்களுக்கும், நூல்களுக்கும் மிகப்பெரும் பங்கு உண்டு. இந்தியாவின் கலாச்சாரம் பாரம்பரியங்கள் மொழிகள் ஆகியவற்றைப் பாதுகாத்து மேம்படுத்த வேண்டியது அவசியம். இதற்கு இளம் தலைமுறையினர் தலைமை ஏற்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில், எஸ்பிபி சகோதரியும், பாடகியுமான எஸ்.பி.சைலஜா, எஸ்.பி.பி.சரண், உள்பட பலர் கலந்து கொண்டனர்.