பூந்தமல்லி கோர்ட்டில் ஆஜரான நடிகர் சந்தானம்!

கட்டிட காண்டிராக்டரை தாக்கிய வழக்கு தொடர்பான விசாரணைக்காக நடிகர் சந்தானம் பூந்தமல்லி கோர்ட்டில் நேற்று ஆஜரானார்.

நடிகர் சந்தானம் மற்றும் கட்டிட காண்டிராக்டர் சண்முக சுந்தரம் இணைந்து, குன்றத்துாரை அடுத்த மூன்றாம் கட்டளை பகுதியில், தனியாருக்கு சொந்தமான இடத்தில் பெரிய அளவில் கட்டிடம் கட்ட முடிவு செய்துள்ளனர். இதற்காக நடிகர் சந்தானம் பெரிய தொகையை சண்முக சுந்தரத்திடம் கொடுத்த நிலையில், பணிகள் திடீரென நிறுத்தப்பட்டன. இதனால் சந்தானம் பணத்தை திரும்பி கேட்க, குறிப்பிட்ட தொகையை மட்டும் அளித்த சண்முக சுந்தரம், மீதமுள்ள தொகையை கொடுக்காமல் இருந்துள்ளார். இந்த விவகாரத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டும் இருவருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக, இரு தரப்பினரும் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்காக நடிகர் சந்தானம், பூந்தமல்லி குற்றவியல் நடுவர் கோர்ட்டில் நேற்று ஆஜரான நிலையில், வரும் 15-ந்தேதி மீண்டும் ஆஜராக வேண்டும் என சந்தானத்திற்கு மேஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.