ஓ.பன்னீர்செல்வத்தை கைது செய்யணும்: நடிகை விந்தியா!

அதிமுக தலைமை அலுவலகத்திற்குள் அத்துமீறி நுழைந்து அங்கிருந்து ஆவணங்களை எடுத்துச் சென்றதற்காக ஓ.பன்னீர்செல்வத்தை கைது செய்ய வேண்டும் என குரல் கொடுத்திருக்கிறார் அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளரும் நடிகையுமான விந்தியா.

இதுகுறித்து அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளரும் நடிகையுமான விந்தியா கூறியுள்ளதாவது:-

அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமை கிடைத்திருப்பது எனக்கு மகிழ்ச்சி தருகிறது. ஒன்றரை கோடி தொண்டர்களின் விருப்பம் இன்று நிறைவேறியுள்ளது. இன்று தற்காலிக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்றாலும் கூட அவர் தான் அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளராக தேர்தல் மூலம் தேர்வு செய்யப்படுவார்.

அதிமுக என்ற குடும்பத்தின் மூத்தவர் என்ற முறையில் நேற்று வரை ஓ.பன்னீர்செல்வம் மீது நான் மரியாதை வைத்திருந்தேன். ஆனால் சொந்த வீட்டிலேயே அவர் கொள்ளையடிக்க வேண்டும் என எப்போது துணிந்துவிட்டாரோ அப்போதே அவர் மீதான மரியாதை போய்விட்டது. பொருளாளராக பொதுக்குழுவுக்கு அவர் வர வேண்டும் என்று தான் அனைவரும் எதிர்பார்த்தனர்.

அதிமுக தலைமை அலுவலகத்தை சீல் வைக்க வேண்டிய அவசியம் எதுவும் கிடையாது. நியாயமாக பார்த்தால் அதிமுக தலைமை அலுவலகத்திற்குள் திட்டமிட்டு நுழைந்து அங்கிருந்த ஆவணங்களை எல்லாம் அள்ளிக்கொண்டு போனதற்காக ஓ.பன்னீர்செல்வம் மீது தான் கைது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிமுக தலைமைக்கழகம் தனக்கு மட்டும் தான் சொந்தம் என்பதை போல் ஓ.பன்னீர்செல்வம் காட்டுவது நியாயமற்ற செயல். ஒன்றரை கோடி தொண்டர்களுக்கும் அக்கட்சி அலுவலகத்தின் மீது உரிமை இருக்கிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.