ராஜராஜ சோழனை இந்துவாக மாத்திட்டாங்க: வெற்றிமாறன்!

ஆர்எஸ்எஸ்அமைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள இயக்குனர் வெற்றிமாறன் ராஜராஜ சோழனை இந்து அரசனாக மாற்றியுள்ளார்கள் என்று பேசியுள்ளார்.

சென்னையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனின் மணிவிழா நடந்தது. அதில் கலந்துகொண்டு பேசிய பிரபல இயக்குனர் வெற்றிமாறன், ‘இந்து மத திணிப்பு மற்றும் தமிழர்களின் அடையாளங்கள் சிதைக்கப்படுவது குறித்து பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வெற்றிமாறன் பேசியதாவது:-

தமிழ் சினிமாவை திராவிட இயக்கம் கையில் எடுத்ததன் விளைவாகத்தான் தமிழ்நாடு இன்னும் ஒரு மதச்சார்பற்ற மாநிலமாக இருக்கிறது. சினிமா வெகுமக்களை மிக எளிதாக சென்றடையக்கூடிய ஒரு கலை வடிவமாக உள்ளது. சினிமாவை அரசியல் மயமாக்குவது ரொம்ப முக்கியம். இன்றைய சூழலில் கலையை நாம் சரியாக கையாளவில்லை என்றால் நமது அடையாளங்கள் பறிபோகும். திருவள்ளுவருக்கு காவி உடை உடுத்துவது இருக்கட்டும் ராஜராஜ சோழனை இந்து அரசனாக மாற்றுவதாக இருக்கட்டும் தொடர்ந்து நமது அடையாளங்கள் மாற்றப்பட்டு வருகிறது. நாம் அனைவரும் விடுதலைக்காக போராட வேண்டும் என்றால் நாம் அரசியல் தெளிவோடு இருக்க வேண்டும். இவ்வாறு வெற்றிமாறன் பேசியிருந்தார்.

இந்த பேச்சை இந்து அமைப்பினர் விரும்பவில்லை. வெற்றிமாறனுக்கு எதிராக கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதற்கு திராவிட சிந்தனையாளர்களும், வெற்றிமாறனின் ஆதரவாளர்களும் எதிர்வினையாற்றி வருகின்றனர். தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்புக்கும், மனுதர்ம சாஸ்திரத்துக்கும் எதிராக திருமாவளவன், ஆ.ராசா ஆகியோர் பேசிவருவதும் அதற்கு பாஜகவினர் கண்டனங்களை எழுப்பி வரும் சூழலில் வெற்றி மாறனின் பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா ”சிவன் கோவில் கட்டிய மாமன்னன் என்ன இஸ்லாமியரா அல்லது கிறித்தவரா, பௌத்தரா என்பதை அந்த தற்குறி சொல்லட்டும்” என்று ஒருமையில் பேசி காட்டமாக டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

வெற்றிமாறன் பேச்சை பாஜகவினர், இந்துத்துவா ஆதரவாளர்கள் கடுமையாக விமர்சனம் செய்தும் வருகின்றனர். ராஜராஜ சோழன் இந்து இல்லை என்றால் அவர் ஏன் சிவனுக்கு கோவில் கட்டினார் என்றெல்லாம் கேள்வி கேட்டு விமர்சனங்களை வைக்கின்றனர். அந்த காலத்தில் இந்து மதம் இல்லை.. சைவம் – வைணவம் இருந்தது என்பதை அறியாமல் பலர் வெற்றிமாறன் தவறாக பேசிவிட்டதாக கூறி கடுமையாக விமர்சனங்களை வைத்து வருகின்றனர். அதோடு இவர் கிரிஸ்துவர் என்றும் விமர்சனங்களை வைக்கின்றனர்.