இயக்குநர் வெற்றிமாறன் பெரியாரின் பேரன்: திருமாவளவன்!

இயக்குநர் வெற்றிமாறன் பெரியாரின் பேரன் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. அது தொடர்பான விவாதங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அந்த வகையில், ராஜராஜ சோழன் தமிழ் பேரரசன்; அவர் இந்து அல்ல என்ற கருத்தை இயக்குநர் வெற்றிமாறன் தெரிவித்திருந்தார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனின் 60ஆவது பிறந்தநாள் மணி விழாவையொட்டி, தமிழ் ஸ்டுடியோஸ் சார்பாக நடைபெற்ற விழாவில் கலந்து கொண்டு பேசிய இயக்குநர் வெற்றிமாறன், “தொடர்ந்து நம்மிடம் இருந்து அடையாளங்களை பறித்துக் கொண்டிருக்கிறார்கள். வள்ளுவருக்கு காவி உடை கொடுப்பதாக இருக்கட்டும்; ராஜராஜ சோழன் இந்து அரசன் என்பதாக இருக்கட்டும். இப்படிதொடர்ந்து அடையாளங்களை எடுப்பது நடந்து கொண்டிருக்கிறது. இது சினிமாவிலும் நடக்கும். சினிமாவிலும் நிறைய அடையாளங்களை பறிக்கிறார்கள். இந்த அடையாளங்களை நாம் காப்பாற்றிக்கொள்ள வேண்டும். விடுதலைக்காக போராட வேண்டும் என்றால் நாம் அரசியல் தெளிவோடு இருக்க வேண்டும்” என்றார்.

அவரது கருத்துக்கு பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதேசமயம், நடிகர் கருணாஸ், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், காங்கிரஸ் எம்.பி., ஜோதிமணி மற்றும் தமிழ் ஆர்வலர்கள் பலரும் இயக்குநர் வெற்றிமாறனுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், இயக்குநர் வெற்றிமாறன் பெரியாரின் பேரன் என விசிக தலைவர் திருமாவளவன் அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து திருமாவளவன் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:-

இராஜராஜ சோழன் காலத்தில் சைவம் வேறு; வைணவம் வேறு. திருநீறு பட்டை வேறு; திருமண் நாமம் வேறு. இரண்டும் வெளிப்படையாக மோதிக்கொண்டன. குருதிச் சேற்றில் தலைகள் உருண்டன. மாறிமாறி மதமாற்றம் செய்து கொண்டன. அக்காலத்தில் ஏது இந்து?.

இக்காலத்து லிங்காயத்துக்களே தாங்கள் இந்துக்கள் இல்லை என்று உரத்துச் சொல்கின்றனர்; போராடவும் செய்கின்றனர். 1000 வருடங்களுக்கு முன்னர் லிங்கத்துக்குப் பெருங்கோயில் கட்டியதால் அவர்மீது இன்றைய அடையாளத்தைத் திணிப்பது சரியா? இது வரலாற்றுத் திரிபாகாதா? இதைத்தானே குறிப்பிட்டார் இயக்குநர் வெற்றிமாறன். அவர் பெரியாரின் பேரன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.