சென்னை பனையூரில் ரசிகர்களை இன்று சந்தித்தார் நடிகர் விஜய்!

சென்னை பனையூரில் ரசிகர்களை நடிகர் விஜய் இன்று சந்தித்து வருகிறார். தன்னை சந்திக்க வந்த மாற்றுத் திறனாளி ரசிகரை தூக்கி புகைப்படம் எடுத்துக்கொண்டார் நடிகர் விஜய்.

நெல்சன் இயக்கத்தில் வெளியான பீஸ்ட் திரைப்படத்திற்கு பிறகு பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது.
தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் வாரிசு வெளியாகவுள்ள நிலையில், விழாக்காலங்களில் நேரடித் தெலுங்குத் திரைப்படங்களுக்கு மட்டுமே ஆந்திரத்தில் முன்னுரிமை அளிக்கப்படும் என்று தெலுங்குத் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, கடந்த நவம்பர் மாதம் முதல்கட்டமாக நடிகர் விஜய் தனது ரசிகர்களை சென்னை புறநகர் பகுதியில் உள்ள பனையூர் விஜய் மக்கள் இயக்க அலுவலகத்தில் சந்தித்தார். அதில், நாமக்கல், சேலம், புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகிகளை சந்தித்தார்.

இரண்டாவது கட்டமாக இன்று செங்கல்பட்டு, அரியலூர், கடலூர், திண்டுக்கல் மாவட்டங்களின் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை சந்தித்தார். இவர்களுக்கு மதிய உணவாக மட்டன் பிரியாணி வழங்கப்பட்டது. ரசிகர்களை சந்திக்க கருப்பு நிற உடையில், புதிய ஹேர்ஸ்டைலுடன் வந்த விஜய்யை பார்த்த ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர்.

இந்நிலையில், அங்கு வந்த மாற்றுத்திறனாளி ரசிகர் ஒருவரை நடிகர் விஜய் தன் கைகளால் தூக்கி புகைப்படம் எடுத்துக்கொண்டார். தற்போது, இது வைரலாகி வருகிறது.