போதைப் பொருள் வழக்கில் ரகுல் ப்ரீத் சிங்குக்கு மீண்டும் சம்மன்!

நடிகை ரகுல் ப்ரீத் சிங் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் பிஸியாக நடித்து வருகிறார். கடந்தாண்டு போதைப் பொருள் வழக்கில் சிக்கிய ரகுல் ப்ரீத் சிங்கிற்கு தற்போது மீண்டும் நெருக்கடி அதிகரித்துள்ளது.
போதைப் பொருள், பண மோசடி வழக்கில் நடிகை ரகுல் ப்ரீத் சிங்கிற்கு அமலாகத்துறை தற்போது மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது.

கடந்த 2017ம் ஆண்டு தெலுங்குத் திரையுலகில் போதைப் பொருள் வழக்கு பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இது தொடர்பாக இயக்குநர் பூரி ஜெகநாதன், சார்மி கவுர், ராணா, நவ்தீப் ரவிதேஜா ஆகியோருடன் ரகுல் ப்ரீத் சிங் உட்பட 12 பிரபலங்கள் சாட்சியாக சேர்க்கப்பட்டு விசாரணை நடந்தது. இந்த விவகாரத்தில், ஹவாலா பணம் கைமாறியிருப்பதும் உறுதியானது. இந்த சம்பவம் தொடர்பாக கடந்த ஆண்டு செப்டம்பர் 3ம் தேதி ரகுல் ப்ரீத் சிங்கிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். பூரி ஜெகன்நாத், சார்மி ஆகியோரும் இந்த விசாரணையில் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், போதைப் பொருள், பண மோசடி வழக்கில் நடிகை ரகுல் ப்ரீத் சிங்கிற்கு அமலாகத்துறை தற்போது மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளதாக தெரிகிறது. இதற்கு முன் விசாரணை செய்த அதே அதிகாரிகள் தான் தற்போதும் ரகுல் ப்ரீத்துக்கு சம்மன் அனுப்பியுள்ளார்களாம். மீண்டும் இந்த வழக்கு சூடுபிடித்துள்ளதால், இதில் தொடர்புடைய மற்ற பிரபலங்களும் பதற்றத்தில் உள்ளனர்.