25 ஆண்டுகள் கழித்து கம்பேக் கொடுக்கும் நடிகை சங்கீதா!

விஜய்யின் பூவே உனக்காக படம் மூலம் பட்டிதொட்டி எல்லாம் பிரபலமான நடிகை சங்கீதா 25 ஆண்டுகள் கழித்து மீண்டும் தமிழ் திரையுலகிற்கு வந்திருக்கிறார்.

குழந்தை நட்சத்திரமாக திரையுலகிற்கு வந்தவர் கேரள மாநிலத்தை சேர்ந்த சங்கீதா மாதவன் நாயர். கடந்த 1996ம் ஆண்டு வெளியான விக்ரமனின் பூவே உனக்காக படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்தார். அதில் இருந்து அவரை பூவே உனக்காக சங்கீதா என ரசிகர்கள் அழைத்தார்கள். ஒளிப்பதிவாளர் சரவணனை திருமணம் செய்து கொண்ட பிறகு படங்களில் நடிப்பதை நிறுத்தி வைத்தார். ஒரு பெண் குழந்தைக்கு தாயான சங்கீதா 15 ஆண்டுகள் கழித்து கடந்த 2014ம் ஆண்டு மலையாள திரையுலகில் கம்பேக் கொடுத்தார். பிறகு மீண்டும் சினிமாவில் இருந்து பிரேக் எடுத்துவிட்டு 9 ஆண்டுகள் கழித்து கடந்த 2023ம் ஆண்டு மீண்டும் வந்தார். அதில் இருந்து தொடர்ந்து மலையாள படங்களில் நடித்து வருகிறார்.

இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் சங்கீதாவை பார்த்த தமிழ் ரசிகர்களோ, பூவே உனக்காக படத்தில் பார்த்தது போன்று அப்படியே இருக்கிறீர்கள்.தயவு செய்து மீண்டும் தமிழ் படங்களில் நடிக்கவும் என கோரிக்கை விடுத்தார்கள். இந்நிலையில் 25 ஆண்டுகள் கழித்து தமிழ் படத்தில் நடித்திருக்கிறார் சங்கீதா. ஸ்ரீ செந்தில் இயக்கத்தில் பரத் நடிப்பில் உருவாகியிருக்கும் காளிதாஸ் 2 படம் மூலம் மீண்டும் தமிழ் திரையுலகிற்கு வந்திருக்கிறார்.

சங்கீதா பற்றி இயக்குநர் ஸ்ரீ செந்தில் கூறியதாவது:-

எங்கள் படம் சங்கீதாவுக்கு சரியான கம்பேக்காக இருக்கும் என நினைத்தோம். அவருக்கு காளிதாஸ் படம் பிடித்திருந்தது. காளிதாஸ் 2 படம் முழுக்க வரும் கதாபாத்திரம் அவருடையது. அதனால் சந்தோஷமாக நடிக்க ஒப்புக் கொண்டார். ரொம்ப காலம் கழித்து தமிழ் சினிமாவுக்கு திரும்பி வருகிறேன். என் கதாபாத்திரத்தை ரசிகர்கள் பாராட்ட, என்ஜாய் செய்ய வேண்டுமே தவிர ஏன்டா திரும்பி வந்தார் என கேட்டுவிடக் கூடாது என அவர் என்னிடம் கூறினார்.

படத்தில் ரொம்ப முக்கியமான, வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் சங்கீதா. அவர் மானிட்டரை பார்க்கவே மாட்டார். ரொம்ப ப்ரொஃபஷனல். இயக்குநர் சொல்வதுபடி நடிப்பார். காளிதாஸ் படத்திற்கும் இதற்கும் எந்தவித தொடர்பும் இல்லை. சென்னை, கேரளாவில் படப்பிடிப்பு நடத்தினோம் என்றார்.

பல ஆண்டுகள் கழித்து சங்கீதாவை மீண்டும் பெரிய திரையில் பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.