இயக்குநர் லோகேஷ் கனகராஜ் சமூக ஊடகங்களில் இருந்து தற்காலிகமாக விலகுவதாக அறிவித்துள்ளார்.
மாநகரம் படத்தில் அறிமுகமான இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தமிழில் முக்கியமான இயக்குநராக மாறியுள்ளார். விஜய்யுடன் மாஸ்டர், லியோ என்ற வெற்றிப் படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ், தற்போது ரஜினியை வைத்து கூலி என்ற படத்தினை இயக்கியுள்ளார்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது. தற்போது, போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடைபெற்று வருகின்றன. கூலி திரைப்படம் வரும் ஆக.14ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது.
இந்நிலையில், இயக்குநர் லோகேஷ் தனது எக்ஸ் பக்கத்தில், “கூலி படத்தின் புரமோஷன் வரைக்கும் சமூக ஊடகங்களில் இருந்து தற்காலிகமாக விலகுகிறேன்” எனக் கூறியுள்ளார்.
ஒவ்வொரு படத்துக்கு பின்பும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இப்படி ஓய்வு எடுப்பது வழக்கமானதுதான். இது மாதிரி ஏற்கனவே பலமுறை அவர் செய்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.